Sunday, August 10, 2014




ஞானத்தின் வாசல்  திறந்திருக்க - மனம்
மோகத்தின் கொல்லையில் லயித்திருக்க
வேதத்தின் குரலது கேட்டிருக்க
இளம் பரியின் வேகம் சூழ்ந்திருக்க
மாயன் அத்தனவன் ஆடிவந்தான்
என் காதலன் வேடம் பூண்டு வந்தான்

துளை ஏந்திய குழலெலாம் அவன் கானம்
உளை கூடிய உளமெலாம் சுடும் காமம்
களை படர்வதை உணர்ந்து அகலுவதே
அடிகேள் அவன் சொலும் விஞ்ஞானம்
அகவை நகர்ந்த வழித்தடமெங்கும்
வேதனை விதையை தூவி வைத்தான்
சோர்ந்து விழுந்ததாய் தகவலறிந்த்தும்
போதனை சாயம் பூசிவிட்டான்

சகலமும் அவனென கதறும்வேளையில்
சபலத்தின் போர்கொடி உயர்கிறது.
அவலம் அறுப்பான் எனநம்பும் நொடிதனில்
சலம் போல் சபலமும் நகர்கிறது.
கற்றதும் பெற்றதும் காதலொன்றே
என பற்றிகிடந்தேன் இந்நாளும்
நித்தமும் காதலின் திளைப்பதோன்றே
பித்தனின் பிள்ளையின் அடையாளம்!!


 









Wednesday, July 16, 2014




நகர்ந்து செல்லும் நீரோடையில் அன்று விழுந்தது ஓர் நிலவின் பிம்பமல்ல.  ஓராயிர நிலவுகளின் பிம்பம். உச்சத்தில் உதித்த ஒற்றை முழுநிலவின் கீழ் குவிந்து நின்ற கொத்து கொத்தான மனிதர்கள். விஸ்ரூபமெடுக்கும் ஒற்றை கடலின் தரையில் எண்ணிலடங்கா கூழாங்கற்கள் குவிந்து கிடப்பது போல் அன்று அய்யனின் முன்பாய் குவியலாய் உயிர்கள்.

இன்று குவியலுள் நாங்களும்.... இதற்கு முன்பு இப்படியொரு முழுநிலவு பொழுதில் தேவ கானத்தை அவர் மாணவர் இசைக்க அவருக்கு இணையாய் ஓர் ஆசனத்தில் எங்களை அமரவைத்தார்.

அது 2013 குருபூர்ணிமா நானும் எனக்குள் ஒருவருமாய் ஒரே நாற்காலியில் அமர்ந்தோம், அவர் திருவடிகளை ஸ்பரிசித்தோம். நிழல்படத்தில் கூட அவர் கண்களை நேரே பார்க்க திராணியற்ற என்னை நிஜத்தில் அவர் அருகே இருத்தியது அவர் கருணை. என் வயிற்றில் அசைவுகளுடன் அவரை வணங்கிகொண்டிருந்த என் குழந்தையின் பாக்கியம்.

இப்போது 2014, குரு பூர்ணிமா. எனக்கும் அவருக்கும் சூட்சுமமாய் எத்தனை கோடி தூரமோ! ஆனால் பூகோலம் சொல்லும் 450 கி.மீ தூரத்தை எப்படி கடப்பது. கண்ணீரின் கோடுகளால் அளந்து கடந்தேன். பால் வாங்க மட்டுமே செல்வதாய் அந்த அடுமனை வரை நினைத்திருந்தோம். சொற்ப சில்லறையை எண்ணி பார்த்து திரும்புகையில் கழுத்தில் தேவியந்திரத்துடன் நெற்றி நிறைய திருநீற்று திலகத்துடன் நின்றிருந்தார் உஷாக்கா. அவர் உஷாக்கா என்பதை கூட இதை எழுதுவதற்காகவே சில நொடிகள் முன்பு தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னையும் மீறி அவரிடம் கேட்ட முதல் கேள்வி.

நீங்க ஈஷா வாலண்டியரா..

ஆமாக்கா.

எங்க இருக்கீங்க.

இதே அபார்ட்மெண்டல தான். ஏன் நீங்களும் ஈஷா வாலண்டிரியா.

எஸ்.

அப்ப வீட்டுக்கு வாங்க தேவி குடி வச்சுருக்கோம். சற்குரு யந்தரம் வச்சுருக்கோம். நாளை குருபூர்ணிமா, ஆஸ்ரம்லயிருந்து இவினிங் 6 0 க்ளாக் தேவிக்கு ஆராத்தியும், குருபூஜையும் செய்ய சொல்லியிருக்காங்க. யூ கேன் ஆல்சோ ஜாயின்.

என்று அவர் சொல்லி முடிக்கும் முன் கொற்றவை உஷாக்காவின் 1 வயது மகன் யோகேந்த்ரா வைத்திருந்த பிஸ்கட்டை தன்வசப்படுத்தியிருந்தாள்.

பால் மட்டுமே வாங்கிவருவதாய் உத்தேசம் எங்களுக்கு. திரும்பி நடந்த திசை நெடுகிலும் பால் பாக்கெட்டுடன், கண்கள் மறைய நீரும், மனம் நிறைய ஓர் நிகழ்விற்கான அழைப்பையும் ஏந்தி சென்றோம்.

உஷாக்காவின் ப்ளாட் A-405. இது அடையாளம் மட்டுமே. நுழைந்தபின் வெள்ளிங்கிரி அடிவாரத்தின் அசல் சாயல் அந்த இல்லத்திற்க்கு.  அவர்கள் இல்லத்தில் அனைவரும் வெள்ளாடை தரித்திருந்தனர் யோகேந்த்ரா உட்பட.  அங்கு அதிர்ந்த சவுண்ட்ஸ் ஆப் ஈஷா அதிர்வுகளில் எனக்கு முன்பே வந்தமர்ந்திருந்த சில தியான அன்பர்கள் ஆற்றலின் உச்சத்தை எட்டி கொண்டிருந்தார்கள்.

தியானத்தில் மூழ்கியிருந்த அன்பர்களின் கைகடிகாரம், அவர் சட்டைபையில் வைத்திருந்த பேனா, சற்குரு படம் அருகே குருபூஜைக்காக தயாராக வைத்திருந்த வாழைபழம், நெய்வேதியம் என ஒவ்வொன்றாய் தேடி நான்கு கால்களில் அளந்து அளந்து கொய்து கொண்டிருந்தாள் கொற்றவை.

அக்கா, குழந்தை ரொம்ப ஆக்டிவா இருக்கு ஆனா இவங்கள வைச்சுகிட்டு உங்களால சைலன்ஸ்ல உக்கார முடியுமா....? என்றதும் புரிந்து கொண்டேன்.

சற்குருவுக்கு வாங்கியிருந்த பழங்களிலிருந்து ஓர் மாதுளையை எடுத்து அவள் கையில் கொடுத்து சகல மரியாதையுடன் அவளை அவள் தந்தையுடன் வெளியே அனுப்பிய பின் துவங்கியது குருபூஜை.

எந்த அசைவுகளும் இல்லை. காத்திருந்த நொடி கனிந்ததற்க்கான எந்த சலனமும் இல்லை. ஐம்புலனும் வஞ்சனை செய்ய விலங்கு மனத்தால் ஓர் மெளனத்தை நிகழ்த்திகொண்டிருந்த வேளையில் சற்குருவின் குரலில் மென்மையாய் மிக மென்மையாய், மென்மையினுள் ஓர்  பிரளயமாய் ஓங்கி ஒலித்தது பிரம்மானந்த ஸ்வரூப்பா. ஆயுளும் போதாது, ஆன்மாவின் ஆனந்தமும் தீராது அந்த அனுபவத்தை சொல்லி முடிக்க.

உஷாக்காவிற்க்கு தேங்க்யூ என்றேன். உங்களுக்கு இன்னொரு கிப்ட்டும் இருக்கு எவ்ரி மன்டே வி டூ குருபூஜா நீங்க வாராவாரம் வரணும் பட் கொற்றவையை யார்கிட்டயாவது விட்டுட்டு வாங்க என்ற விளையாட்டாய் சொல்லி சிரித்தார். 

புளியோதரையும், சுண்டலும் கைகளை நிறைத்திருக்க எங்கள் இல்லம் நுழைந்தோம். சற்குரு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கும் கொற்றவை இன்று முகத்தை திருப்பி கொண்டாள்.....வெளியே அனுப்பிய கோபம் இருக்காதா என்ன? பிக்காஸ் ஷீ இஸ் சென்ஸிடிவ் டூடூடூடு !!!!

Friday, June 13, 2014





அவர் இன்னும் அதே கிருஷ்ணர் தான். ரோட்டின் ஓரமாக ஓர் தாத்தா பராமரித்து வரும் சிறிய பொம்மை வடிவிலான கிருஷ்ணர். அவரை எப்படி அலங்கரிப்பதென்று கூட தெரியாமல் வாராவாரம் சனிக்கிழமைகளில் சாணத்தால் அக்கிருஷ்ணன் சிலையை மெழுகி தவறாமல் 5 புள்ளி கோலம் போட்டிருப்பார் தாத்தா. எல்.கே.ஜி படிக்கும் போதிருந்தே தினமும் பள்ளிக்கு செல்கையில் கிருஷ்ணனுக்கு ஒன்று எனக்கொன்றாய் இரண்டு நியூட்ரின் சாக்லேட்களை வாங்கி தருவார் அப்பா. காலையில் கிருஷ்ணனுக்கு ஒரு நியூட்ரினை வைத்து விட்டு பள்ளி விட்டு வரும் வேளையில்…காணாமல் போன சாக்லேட்டுக்கு அப்பாவிடம் காரணம் கேட்பேன்.  நான் வைத்தாலேயே விரும்பி உண்டுவிட்டான் கிருஷ்ணன் என்று சுகமான கதைகள் மீட்டி என்னை கர்வம் கொள்ள செய்வார் அப்பா. 


வருடங்கள் கழிந்து உடல் நலம் குன்றிய என் 10 மாத குழந்தையை பழக்கப்படாத வித்த்தில் என் இடுப்பில் செருகியிருந்தேன். மருத்துவமனை செல்ல கிடைக்க கூடிய ஆட்டோ ஒன்றே அசல் கடவுளாக மாறியிருந்த வேளையில் கண்ணில் தென்படுகிற கடவுளையெல்லாம், கடவுள் போன்று தோன்றுவதையெல்லாம்  வணங்கி வணங்கி கடந்த வேகத்தில்,  பல அடி தூரம் தாண்டிவிட்டிருந்தேன் அந்த பழைய கிருஷ்ணனை.

 எனக்கு திரும்பி பார்க்க தோன்றியது அக்கிருஷ்ணனை. இப்போதெல்லாம் வாரவாரம் சாணம் மெழுகுவது இல்லை போல…..! கிருஷ்ணன் மேல் படிந்திருந்த பழைய சாணம் கருத்திருந்த்து. என்றோ எப்போதோ யாராலோ வைக்கப்பட்ட சர்க்கரை பொங்கல் பனைமரதொன்னையில் காய்ந்து கிடந்த்தது கிருஷ்ணன் அருகில். 


நான் எல்.கே.ஜியில் பார்த்த அதே கிருஷ்ணன். இத்தனை ஆண்டுகளில் அவனை பலமுறை கடந்தும் ஏனோ அவனை நின்று பார்க்க கூட தோன்றியதில்லை எனக்கு. இன்று எனக்கும் அவனுக்குமான இடைவெளிக்கு மத்தியில்  எத்தனை இலட்சம் சூடம் ஏற்றப்பட்ட்தோ, எத்தனை கோடி கோரிக்கைகளை ஏற்றானோ நிராகரித்தானோ. அவன் முன் இப்போது கையில் குழந்தையுடன் நான். அவன் மாறவில்லை. அவன் வளரவில்லை. அன்றெனக்கு விளையாட்டாய் தெரிந்தவன் இன்று என் குழந்தை விளையாடும் பொம்மை உயரத்தில் அப்படியே இருக்கிறான்.  ஆனாலும் இன்னும் அதே தீர்க்கமான பார்வை அவனுக்கு.

 என் முன் அவன் அப்படியே இருக்கிறான். அவன் முன் நான் வேறாய் நிற்கிறேன். அன்றிருந்த்து போல்  இப்போது என்னிடம் குழந்தைதனமில்லை, பொறாமையற்ற மனமில்லை, காமம் கொள்ளாத கண்கள் இல்லை, ஆசையற்ற ஹிருதயமில்லை. அவனுக்கு என்னை அடையாளம் தெரியவும் வாய்ப்பில்லை. 


நான் கடவுளுக்கு செல்ல பிள்ளை, நான் வேண்டினால் உடனே எதையும் கொடுப்பான் இறைவன், நான் நல்லவள் என்பது போன்ற நேர்மறையான எண்ணங்களை, ஆன்மிகத்தின் சாயத்தை அச்சிறுவயதில் என்னுள் பூசியவன் இந்த சாணவண்ண கண்ணன். 


எப்படி  மறந்தேன் அவனை….. சட்டென கைகளில் உறுத்திய மேரி பிஸ்கட்டை அவன் முன் வைத்து அன்றைய தினத்தின் அந்த நொடி பொழுதின் வேண்டுதலாய் குழந்தையின் உடல் நலத்தை பிரார்த்தித்து விடைபெற்றேன். அவனை சந்திக்கும் எந்த பிரயத்தனமுமின்றி இரண்டொரு நாளில் மீண்டும் அச்சாலையை கடக்கையில் எந்த வித சலனமுமில்லாமல், அவனை போலவே தீர்கமாய் அதேயிடத்தில் உறுதியாய் இருந்தது நான் வைத்த மேரி பிஸ்கட்.

Friday, March 1, 2013


"சூடா காபி குடிக்க வேண்டாம் பாப்பா தலையிலயே போய் சூடா கொட்டும்"
"இல்ல காட் அதுக்கு நேச்சுரலாவே ஒரு ஹெல்மெட் வச்சுருப்பார். அதோட தலையில படாது."

"இன்னும் கொஞ்சம் நாளைக்கு நீ மீன் எல்லாம் சாப்பிட வேண்டாம்"
"ஏன்"
"பாப்பாக்கு உள்ள நாத்தமடிக்கும்"

குழந்தைமனம் அழகு. அதைவிடவும் குழந்தைதன்மையை திணித்து கொள்ளும் தருணங்களும் இப்போதெல்லாம் அழகாக தெரிகிறது.
கணவரை விடவும் குழந்தையின் அப்பாவை ரொம்ப பிடிக்கிறது எனக்கு.
நாளை குழந்தைக்கு பிடிக்க கூடும் அப்பாவை விடவும் அம்மாவின் கணவரை.
*********

அனுதாபங்களையும் பச்சாபதாங்களையும் சம்பாதிப்பதில் கூட ஒரு கள்ள ருசியிருக்கும். இருக்கிறது. அதைவிடவும் இனிக்கிறது அக்கறையை சம்பாதித்து கொள்கிற இந்த நாட்கள். எங்கள் குளம் இப்போது நதியாக ஓட துவங்கிவிட்டது, ஓர் குழந்தையை முன்வைத்து, ஓர் தலைமுறையின் கனம் சுமந்து, சகலசம்பந்துடனோ அல்லது வலிந்துதிணிக்கப்பட்டோ, பிறக்கவிருக்கும் உறவுகளையும் உணர்வுகளையும் மற்றபிற கூளாங்கற்களையும் எங்களோடு சேர்த்தே உருட்டி கொண்டு ஓடுகிறோம். எங்களில் கால் நனைப்பவர்களையும் பிடிக்கிறது எங்களை அள்ளி கொள்கிறவர்களை பிடிக்கிறது. எங்கள் ஓட்டத்தை மணல்திட்டில் திருமால் போல் ஒருக்கப்படுத்து ரசிப்பவர்களையும் தான் பிடிக்கிறது. நதிக்கு எதை தான் பிடிக்காது, அல்லது நதியை பிடிக்காதவர்கள் யார்?
**********








Wednesday, February 20, 2013

தாயே யசோதா




முறுக்கியிருக்கும் புது கொலுசை விடவும் தளர் கொலுசுகள் கால்களுக்கு அழகு இல்லையா...?. குழந்தைகளுக்கு இரண்டுமே அழகு தான் அல்லது அனைத்துமே அழகு தான். அழகானவைகள் எல்லாம் குழந்தைகளையும், குழந்தைகள் எல்லாம் அழகானவைகளையும் எந்த சமரசமும் இன்றி தேர்வு செய்து கொள்கின்றன. எனக்கு எப்போதையும் விட இப்போது அந்த பக்கத்து வீட்டு கருப்பு குழந்தையை ரொம்ப பிடிக்கிறது. கொத்து கொத்தான முத்துக்கள் பூக்க குலுங்கி குலுங்கி அசைக்கிறான் அந்த கொலுசை. கருப்பு டேலியா பூவை போல் திரண்டு இருக்கிற பின்னழகு பிட்டங்களில் அவன் எங்கேங்கோ அமர்ந்து பூதி அப்பி பழுப்பு நிறத்தில் படர்ந்திருக்கிற புழுதி, குழந்தைகளுக்கேயுரிய கவர்ச்சியை கூட்டிவிடுகிறது. பால்கோவா தின்று உறுகி வழியும் எச்சிலும் முக்கிலுருந்து அரும்பும் சளியும் சங்கமித்து அவன் கன்னத்தில் படர்த்தியிருக்கின்றன அடையடையாய் மேகவடிவலான வடுக்களை........ வேறொரு குழந்தையால் ஊனமாக்கப்பட்ட டெடிபியரின் காதை வாயில் கவ்வி என் வாசல் வரும் அவனை பார்க்கிற பொழுதெல்லாம் நினைவு வருகிறது "தாயே யசோதா...." என்று நீள்கிற சுதாரகுநாதனின் குரல்

"காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்....
பாலன் என்று தாவி அணைத்தேன், அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன்மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணமிகவாகுதடி....."

என்ற வரிகளும் நினைவுவருகிறது அல்லது நானாக விரும்பி அதை நினைவில் வரவழைத்து கொண்டு ரசித்து இழைகிறேன் அந்த காட்சியில். என் வாசல் வந்த மாயன் கோபல கிருஷ்ணனுக்காக பக்கத்து வீட்டில் கட்டப்பட்டிருக்கும் தூளியின் கீழ் கவிழ்ந்திருந்தது நிழல். அந்த நிழல் இப்போது வளர துவங்கிவிட்டது என் வாசல் நோக்கி......அதோடே சேர்ந்தே வளர்கிறாள் எனக்குள் வெளிப்பட துடிக்கும் யசோதையும்....

Monday, December 10, 2012

ரெளத்திரம் பழகியவர்கள்

இயற்கையான செயல்களுக்காகவும், செயற்கையாய் கை குலுக்கவும், நமக்கு பிரியமானவர்களின் தொடுகைக்காவும், இத்தனை நாட்கள் உடன்கிடந்த என் கைகளுக்கு புதிய முகவரியை கொடுத்தது நிலே வசுந்தா. கொடுக்க காரணமாய் இருந்தான் சூர்யா. சூர்யாவை சூர்யாவாக எனக்கு தெரிந்ததை விடவும், செல்லமான குப்புவாகவே அதிகம் தெரியும். எங்கள் பள்ளி நாட்களில், கருநீலக்கலரில் சரிந்த தொப்பியுடன், அவன் நிறத்திற்க்கு சற்றும் பொருந்தாத யுனிபார்மில் ஸ்கவுட் உடை போட்டு உலவியவனை சீனியர்கள் என்ற பெயரில் சற்று அதிகமாகவே வதைத்திருந்தோம்.

பிலிம் இல்லாத காமராவில் அவனை படம் பிடித்ததாக ஏமாற்றி 15 ரூபாய் பணம் வாங்கிய போது தான். 15 வயதில் முதன் முதலில் எனக்கு "ஏமாற்றுதல்" என்ற பண்பு அறிமுகமாகி இருக்க வேண்டும். அடுத்த இரண்டு வயதில் எல்லாம் ஏமாற்றுவது தவறு என்று தெரிந்த, உத்தம ஆவதாரம் எடுத்த பின் உண்மையிலேயே அவனை புகைப்படம் எடுத்து அவனிடத்தில் கொடுத்து 15 ரூபாய்க்கான பாவ கணக்கை சரிசெய்து கொண்டேன். எத்தனையோ தடைகளை தாண்டி பிறந்ததாலேயே குப்புராஜ் என அவன் அம்மா பெயரிட்டது, மூக்குகுத்தி அவனை வேறொருவரிடம் விற்று மீண்டும் பெற்று கொண்டது என இந்த இளம் வயதிலேயே அவனுடைய வரலாற்று பக்கங்கள் அதிகம். ஆனால் நியுமராலஜியின் செல்ல கிள்ளலில், இப்போது அவன் சூர்யா. நமக்கு குப்பு தான்.



வாழ்க்கையில் ஓர் மிகப்பெரிய மாற்றம் தேவையாய் இருந்த தருணம். வாழ்வின் எல்லா திசைகளிலும், எல்லா மனிதர்களிலும், எல்லா நொடிகளையும் கடக்க விடாமல் மூச்சடைத்து நின்ற தருணம். என்னை நானே ஓர் ராட்சஷ பலூனில் இட்டு காற்றையும் நானாகவே அடைத்து கொண்டேன். யாராவது சிறிய துவாரத்தின் வழி வெளியேற்றமாட்டார்களா என்று ஏங்கி நின்ற பொழுது. புதிய மனிதர்கள், புதிய முகங்கள், புதிய மொழி எனக்கு தேவையாய் இருந்தது. ஆனால் என்னிடம் நான் மாற்றி கொள்ள விரும்பாததாகவும், மாற்றவே முடியாததாகவும் இருந்தது காதலும் அன்பும். காதலை மட்டும் வைத்து கொண்டு, காதலுக்கான சகலத்தையும் தொலைத்து விடும் வழியினை தேடி கொண்டிருந்தேன்.

அழைப்பு வந்தது, எடுத்தேன்.

"அக்கா பிரதீப் என்றான். " ஒவ்வொறு வாக்கியத்தின் முடிவிலும் இவன் அக்கா என்பது...ஒண்டியாய் போன எனக்கு அவ்வப்போது தமையன்களுக்கான ஏக்கத்தை அதிகரித்து கொண்டேயிருந்தது. எத்தனை அலுப்பான விஷயத்தை அவன் பேசினாலும், அவன் பேச்சு என்னை ஈர்க்காத தருணங்களில் நான் கவனம் இழந்து போகும் பொழுதும் அவன் சொல்லும் "அக்கா" என்னை விழிப்படைய செய்துவிடுகிறது.

"பெங்களூர், நிலே வசுந்தா ஹோம்ல நம்ம சிக்ஸ்த் சென்ஸ்வோட  இனாகுரேஷன் இருக்கு வற்றீங்களா" என்றான்.

என்ன இனகுரேஷன் தெரியாது. நிலே வசுந்தா ஹோம் என்ன இடம் தெரியாது. எதற்காக என்னை கூப்பிடுகிறான் தெரியாது. வழிகாட்டி பலகை இல்லாத பாதைகள் சமயத்தில் சுகமானதாக ஆகிவிடுவதை போல். எங்கு போகிறோம், எதற்கு போகிறோம் என எந்த கேள்வியும் இல்லாமல். அவன் சொன்ன நாளில் சொன்ன இடத்திற்க்கு கிளம்ப மட்டுமே அனுமதித்திருந்தது என் மனம்.

பெங்களூர் சாலைகள் கோவையை போல் இல்லை. நாம் சரியாகவே போக நினைத்தாலும் தொலைவது நிச்சயம். நானோ தொலைவதற்காகவே கவனமாய் சென்றவள். அழகாக தொலைந்து போனேன். ஓர் உள்ளூர்வாசியின் உதவியுடன் என்னை சுலபமாக மீட்டெடுத்தான் குப்பு. "உங்களுக்காக தான் வெயிட்ங்" என்றான். சின்ன வயதிலிருந்தே நான், குப்பு பிரதீப் மூவரும் பள்ளியின் இளம் பேச்சாளர்களாக அறியப்பட்டிருந்தோம். நாங்கள் "ஸ்பீச் கேங்" எங்களை போலவே எங்கள் பள்ளியில், டான்ஸ் கேங், சிங்கிங் கேங் என பல உண்டு. எல்லோரும் ஒரு படையாய் கிளம்பி சுழற்கோப்பைகளை தட்டுவது, அடுத்த பள்ளி கேங்குகளுடன் வம்பிலுப்பது என சகலத்தையும் சத்தமில்லாமல் செய்து வந்தோம்.

எனக்கு அப்போது டி.ஆர் பாணியிலான பேச்சு வசனங்கள் எளிதில் வசப்பட்டதாலும். என் அப்பாவின் நண்பர்கள் சிலர் இலக்கியத்துறையில் பங்காற்றி கொண்டிருந்ததாலும் எனக்கு சில கவிதைகள், பாடல்கள் என சிலது அத்துபடி. அதில் நாங்கள் அதிகம் பிரயோகிப்பது.....

"இளைஞனே பருவ நெருப்பில் காய்ச்சிய வாளே! நாளை என்பது உன் திருநாளே!
நினைவிருக்கட்டும் உன் புருவ நெருப்பில் புகம்பங்கள்.
நீ இமைதிறந்தால் அதில் சூர்யோதையங்கள்!
வா நீ வெல்ல விண்வெளி காத்திருக்கிறது,
நீ பந்தாட கிரகங்கள் காத்திருக்கிறது."

இன்னும் தொடரும் இந்த உணர்ச்சி கவிதையின் பிற்பாதி எப்படி மறந்தது என்பதே ஆச்சரியம் தான். காரணம், பெண்மை, பாரதி, சமூகம், சினிமா என எந்த தலைப்பு கொடுத்தாலும் இந்த உணர்ச்சி கவிதையை மூவரும் முத்தாய்ப்பாய் சொல்லி பரிசை அள்ளுவோம். நாங்கள் வெவ்வேறு வகுப்பு என்பதால், சீனியர், ஜூனியர் என வெவ்வேறு பிரிவுகளில் போட்டி நடக்கும். ஆனால் நாங்கள் பேசுவது என்னவோ ஒரே ஸ்கிரிப்டை தான்.

இந்த ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்யும் படலம் மிக முக்கியமானது. ஓர் ராணுவத்தை தயார் செய்யும் பாங்குடன் அவர்கள் இருவருக்கும் எங்கள் இல்லத்தில் பயிற்சியளிப்பேன். டான்ஸ் கேங், சிங்கிங் கேங் அனைவரை விடவும் நாம் பரிசுகளை அள்ள வேண்டும் என்று அவர்களை மூளை சலவை செய்வேன். நான் அன்று கற்று கொடுத்த பாரதி பாடல்களை, இன்று பாரதியை விட்டு நெடும் தூரம் வந்துவிட்ட என்னிடம் அந்த பசுமை மாறமல் அப்படியே பகிர்ந்து கொள்கிற இந்த சிறுவர்கள் என்னை வியக்க செய்கிறார்கள்.



நான் பாடல்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மட்டும் தான் இவர்களுக்கு கற்று கொடுத்தேன். ஆனால் அதை இத்தனை சுலபமாய் இவர்கள் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. "சிக்ஸ்த் சென்ஸ்" என்ற சமூக அமைப்பை துவங்கி, இன்று பல நலதிட்டங்களை இவர்கள் செய்து வருவதை கண்டு நெகிழ்ந்து கொண்டேயிருக்கிறது மனம். இத்தனை அழகாய் இவர்கள் ரெளத்திரம் பழகுவார்கள் என நான் நினைக்கவில்லை, தனி மனிதனுக்கு உணவில்லையேல் இவர்களின் உணவை தியாகம் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

"நிலே வசுந்தா" வில் நுழைந்த பொழுது அத்தனை நினைவுகளும் அலையலையாய் எழுந்தது மனதில். பெரும்பாலும் நான் ஏற்படுத்தி கொண்ட அழுத்தங்களுக்கலாலும், ஈஷாவின் ஆனந்தத்திலும் மட்டுமே நான் அழுவதுண்டு. அன்று என் கண்களை நனைத்த நீருக்கும் பலம் அதிகம். ஈரம் அதிகம். துவர்ப்பு அதிகம். 25 வண்ணங்களில் அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது அமாவசை இரவு. எப்படித்தான் மனது வந்ததோ இவர்களை ஆதரவற்று விட்டுவிட. குப்பு சொன்னான்



 "சில குழந்தைங்க ஸ்ட்ரீட்ல கிடைச்சாங்க, சில குழந்தைங்க டெஸ்டிட்யூட்ஸ், சில குழந்தைங்க செமி ஆர்பன், சிலர் ஆர்பன்". இவங்களுக்கெல்லாம் என்ன வேணும்னு கேட்டு இவங்களுக்கு தேவையானத வாங்கிட்டு வந்திருக்கோம். பெங்களூர்ல "நிலே வசுந்தா ஹோமோட" சேர்ந்து தான் நாம் பணியாற்ற போறோம். அதுக்கு தான் இன்னிக்கி இனாகுரேஷன், நீங்க இந்த குழந்தைங்க முன்னாடி பேசனும். இவங்களுக்கு கிப்ட்ஸ் குடுக்கனும். இனிமே சிக்ஸ்த் சென்ஸோடு சேர்ந்து நீங்க இயங்கனும்.

தேவையற்ற இடத்திலும், நான் தேவையில்லை என்று நினைப்பவர்களின் இடத்திலும் தோண்டையின் ஈரம் வற்ற பேச தெரிந்த எனக்கு அந்த குழந்தைகளிடம் பேசத்தெரியவில்லை. என்னை விட நன்றாகவே சொல்லி கொடுக்க தெரியும் குப்புவுக்கு என்று அன்றைக்கு தான் தெரியும். "நாங்கல்லாம் உங்க அக்கா, அண்ணா மாதிரி, உங்களுக்கு என்ன வேணாலும் கேளுங்க" என்று சொல்ல சொன்னான். சொன்னேன். ஓர் குழந்தை எழுந்து மண்டியிட்ட வாக்கில் என்னிடம் "தன்னியவாதகளூ" என கன்னடத்தில் சொல்லவும்.

தெரித்து விழுந்தது என் துளிகள். ஒருவரை பார்த்து வணங்கி நிற்பது எத்தனை கூர்மையான ஆயுதம் என்று ஈஷாவின் உயர்நிலை வகுப்புகளில் உணர்த்தியிருக்கிறார்கள். நான் எத்தனை குற்றம் செய்திருந்தால், அந்த ஆயுதம் அத்தனை கூர்மையாக என்னை தாக்கியிருக்கும் என்று இன்றும் மலைக்கிறேன். செவ்வனே நிகழ்ந்தது துவக்க விழா. கருப்பு வெள்ளை ஓவியத்திற்க்கு வண்ணம் பாய்ச்சுவதை போல் அனைத்து குழந்தைகளும் ஸ்கெட்ச் பென்சில், கொடுத்து மகிழ்ந்தோம். அந்த பொருட்களை குழந்தைகள் வாங்கி கொண்டார்கள் என்பதை விட நாங்கள் அவர்களிடமிருந்து ஏராளமான புதிய பரிமாணங்களை வாங்கி கொண்டோம் என்பது தான் சத்தியம்.



சிக்ஸ்த் சென்ஸ் இரண்டு இளைஞர்களை மட்டும் கொண்டது அல்ல. இவர்களுக்கு பின் ஓர் மாபெரும் மாணவ படையே உண்டு. இந்த அமைப்பின் அடுத்த திட்டம்......."Desire Alive" குழந்தைகளின் விருப்பங்களை எழுதி வாங்கி... அதை வண்ண காகிதத்தில் அழகாய் புதைத்து, அவர்களுக்கு ஆச்சர்யமான சந்தோஷம் தருவதே....... எனக்கு அறிமுகமான புதிய முகங்களுடன் புதிய உணர்வுகளுடன், அசலான ஆறாம் அறிவை பயன்படுத்த துவங்கிவிட்டேன்.

நண்பர்களே நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.....பூக்களை விதைக்கத்தான் சூழல்கள் தேவை. புன்னகைகளை விதைக்க அல்ல.

மேலும் விபரங்களுக்கு  http://www.sixthsenseindia.org/
தொடர்புக்கு Mobile: + 91 9894447177, 9894060566, 9629447577
மின்னஞ்சல்: info@sixthsenseindia.org

Tuesday, December 4, 2012

பாஷை

பாஷை

வேண்டாம் என்று புரியும் வார்த்தையில் சொல்லி
வேண்டும் என்பதை புரியாத பாஷையில் சொல்லும்
இந்த விசித்திரமான பாஷையை
புரிந்து கொள்ள முயன்றிருந்தால் கூட
நாம் சிநேகிதர்களாகியிருப்போம்.
*****
 
இன்று

இன்றைய நாளை இலக்காக வைத்து
நகர்ந்த என் நாள்காட்டி.
இன்றைய பொழுதில்
இலக்கை அடைந்தபின்
நீர் கப்பிய கண்களில்,
ஈரம் உலர்ந்தபடியே
வெரித்தது பார்த்தது
எந்த அறிவிப்பும் இன்றி
காலம் நட்டு வைத்துவிட்ட மற்றொரு இலக்கை.
******