Wednesday, January 25, 2012


மன்னிப்பு

அன்று வானத்தில் இரட்டை நிலவு.
அதன் திகம்பர தரிசனத்தில் வியர்திருந்தது உலகம்.
அந்த நொடி பொழுதில் எதற்க்கும் யாருக்கும் மன்னிப்பு அருளப்படும் என்ற அசரிரீ பின் வரிசையில் நின்றன...
என்னற்ற மணல் வீடுகளை இடித்து தள்ளிய அலைகள்.
குலைமுற்றிய வாழை இலைகளை கிழித்துவிட்டதாய் காற்று
கொத்தி வந்த மகரந்தத்தை தவறவிட்ட தேனீக்கள்
யாராலும் ஸ்பரிசிக்கப்படாத புல்லாங்குழல்கள்
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் பூசும் கடவுளும் - அவற்க்கு பின்
என்னை காயப்படுத்திவிட்டதாக நீயும்.
உன்னை எப்போதும் காயப்படுத்தும் நானும்.

வித்தியாசம்

இந்த நொடிக்கும் அடுத்த நொடிக்குமான வித்தியாசம்
இந்த நொடி இருக்கும் நீ
அடுத்த நொடி இருக்கமாட்டாய் என்பது மட்டும் தான்.
இந்த நொடிபொழுது வித்தியாசம்
எனக்கு சில கோடித்தவிப்புகளை தருமென்றால்
நீ என்னோடே  இருந்திருக்கலாம்.
இல்லை நான் உன்னோடு இல்லாமலையே இருந்துவிடலாம்.

தேவதை


ஒரு கையில் கோடாரியும்
மறுகையில் மண்வெட்டியும் ஏந்தி
அவன் மனதை வெட்டி பிளந்து பிளந்து - அந்த அடிமனதில் மண்டிகிடக்கிற மண்ணை கொத்தும் தேவதை நான் தானாம்.
இப்படியும் காதலியை வர்ணிக்கலாமாம்.
இல்லை என்னை இப்படித்தான் வர்ணிக்கவேண்டுமாம்.
தேவதை இப்படி தான் இருப்பாளா என்ற என் சந்தேகத்தை விடவும்
தெளிவாக தெரிகிறது.
நிச்சயம் உன் மனதை கத்தரிக்க கோடாரியும் மண்வெட்டியும் கொஞ்சம் அதிகம் தான் என்று.
வெண் சங்கு

வெண்சங்கின் மேல் வழுக்கி தவழும் கொழகொழப்பான
வெள்ளை நிறம் அவனுக்கு.
அந்த சங்கின் கடையோரத்தில் கச்சிதமாய் வெடித்திருக்கும் அந்த
இளஞ்சிவப்பு இதழ்களும் அவனுக்கு சாலபொருந்தும்.
என் இரைச்சலுக்கு
இசைக்கு...
எனக்குள் குவிந்திருக்கும் குழந்தைத்தனத்தின் உச்சத்தில்
போட்டு உடைக்கும் தெரிப்புகளுக்கு.....
என அனைத்திற்க்கு பின்னாளும்
ரீங்கரித்து என்னை பின்தொடர்வது
அந்த வெண்சங்கும் அவனும் மட்டும் தான்.


கூதல் காற்று

முந்தைய பிறவியின் உயிர் வாசத்தை ஏந்தி
என் வாசல் வந்தது கூதல் காற்று.
அருகில் அமர்ந்து மெல்ல என் மேல் ஊர்ந்து சென்றது.
பெயர் கேட்டேன் காதல் என்றது.
என் மேலும் பின் எனக்குள்ளுமாய் ஊர்ந்து சென்று
இன்று நானாகவே மாறிவிட்டிருந்தது அந்த கூதல் காற்று.
எனக்குள் நுழைந்ததாலேயே என் உடலின் எல்லையை தாண்ட அனுமதித்த இல்லை நான்.
இன்று நான் அனுமதித்தாலேயே வழி இருந்தும் போக மறுக்கிறது கூதல் காற்று.
இல்லை என் காற்று.
எனக்கு சொந்தமான காற்று.

Thursday, January 12, 2012

அப்பார்ட்மெண்ட் கதை

லிப்டின் வழியே கனமான பொருட்களை மிகுந்த கவனத்துடன் இறக்கி கொண்டிருந்தோம். வீடு மட்டும் புதிதல்ல, இந்த லிப்ட,. லிப்டில் இருந்து சமான்களை இறக்குவது,  இந்த அப்பார்ட்மெண்டின் மெயின் கேட்டில் நுழைகையில் செக்யூரிட்டி சல்யூட் அடிப்பது என அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அடுக்குமாடி கட்டிடக்கலையில் ஒரு விதமான ஆஸ்பத்திரி வாடை. இங்கு மட்டும் தான் சாத்தியிருக்கும் கதவுகளுக்கு பின் எந்தெந்த முகங்கள், எத்தனை உயிர்கள், ஒவ்வொறு கதவுக்கும் பின்னான கதைகள் என எதை பற்றியும் மனம் கவலை படுவதில்லை. இப்போதைக்கு நம் உயிர் பிழைத்தால் போதுமானது என்றும், அவ்வப்போது லேசாக திறந்திருக்கும் கதவுகளின் இடுக்கு வழி... கண்களின் ஒளியை கூடுமானவரை பாய்ச்சி... காலில் கட்டிருந்தால் விபத்து, பெண்ணின் அருகில் தொட்டில் இருந்தால்.."பிரசவம்ம்ம்... போல...." என்று கதைகளின் முடிச்சுகளை பின்னலிடுவது ஆஸ்பத்திரியின் சுவாரஸ்யம். அதைபோலவே இருப்பதாலோ என்னவோ இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஆஸ்பத்திரியின் சாயல். 

இதற்கு முன்பு கோவையில் வசிக்கும் போதெல்லாம்.. "புஷ்பாக்கா வீட்டுக்கு எதுக்க இருக்க மாவுமில்". "ராஜி பாட்டி வீட்டுக்கு ஒட்டுனாப்பல இருக்க பைப்பு குழாய்" என்று வழித்தடங்களை கூட மனிதர்களின் முகங்களை கொண்டு தான் அடையாளம் சொல்லுவாள் அம்மா. ஆனால் இங்கு மனிதர்களின் விடவும் எண்கள் தான் அதிகம் பேசுகின்றன. சில மாதங்கள் இருக்கும். அப்போது தான் அம்மாவை முதன் முறையாக இந்த வீட்டுற்க்கு அழைத்து வந்து "இங்க தான் புதுசா குடியேறப்போறோம் என்றேன்." ஆனால் அவள் சேட்டையோ அப்பார்ட்மெண்டின் வலது புற கேட்டில் அன்றே ஆரம்பமாகி விட்டது.

வரவேற்ப்பில் வைத்திருந்த என்னற்ற செடிவகைகளில்,  அம்மாவின் கண்களை விடவும் சிறுத்திருந்த மணத்தக்காளி பரித்ததோ..? இல்லை இவள் அதை பரித்தாளோ....கொஞ்ச நேரத்திலேயே லத்தியுடன் கன்னடத்தில் மிரட்டினார் செக்யூரிட்டி. அன்று அரண்டவள் தான்.... இன்று குடியேறும் நாள் வந்தும் இன்னும் அவள் மிரட்சி நீங்கவில்லை.

"வீட்ட பாத்திருக்காலாம் வீட்டை. எதுகளாச்சும் கதவ திறக்குதுகளா பாரு..., பக்கத்துல எழவு விழுந்த கூட தெரியாது போல..., .."

"அதெல்லாம் தெரியும் உள்ள இண்டர்காம் இருக்கு. அதெல்லாம் அக்கம் பக்கம் பேசிக்கலாம்."

"எத எழவு விழுந்ததையா..."

"ஏம்மா முத நாளும் அதுவா எழவுங்குகிற...."

"பின்ன வீடா இது.. சும்மா பெட்டி பெட்டியா இருக்கு. ஒரு வாச, ஜன்ன கதவு வேணா! பக்கத்துல இருக்கறது குமரியா கிழவியான்னு காண வேணாம்." என்று சிலிண்டரை தூக்கிய வாறு தம் கட்டி நடந்த எங்கள் இருவரின் கைகளிடையேவும் கனத்தை விடவும்.. அவள் புலம்பல்கள் இதமாக இருந்தன.

அந்த முதல் தளத்தில் முற்றத்தில் எங்கள் ப்ளாட். அதை ஒட்டியிருந்த கம்பியில் கைகளை ஊன்றியபடி சரிந்து நின்றிருந்தாள் அந்த பெண். அருகில் நெருங்கும் வரை வயதை யூகிக்க முடியவில்லை. ஆனால் தொலைவில் இருந்தும் பளீரென தெரிந்தது மதியம் இரண்டு மணியிலும் அவள் காலுக்கு அணிந்திருந்த பச்சை நிற ஷாக்ஸ். அவள் உடலுக்கும் உடைக்கும் இடையே பெருத்த இடைவெளி. அதில் சப்பணம் இட்டு அமர்திருந்தது பெங்களூர் காற்று.

எப்படியும் வயது ஒரு 45 கடந்திருக்கும். சாதராணமாகவே எம்பியிருக்கும் பற்களால் உதடுகளை ஒரு சேர மூட முடியாது அம்மாவுக்கு. அதிலும் ஒரு ரகசியமான நக்கல் புன்னகையின் போது உப்பி பெருக்கிற கன்னம். அதனுள் அழுந்தும் காற்று என அனைத்தையும் ஒரு சேர அடக்க முடியவில்லை அவளால். அம்மாக்கள் எப்படியோ...? ஆனால் மகள்களுக்கு அதிலும் குறிப்பாக எனக்கு.. அம்மா சில நேரம் குழந்தையாவதிலும்... நான் சில நேரம் அம்மா ஆவதிலும் கொள்ளை ஆசை. ஆசையை விடவும் எனக்குள் பொதிந்திருக்கு என் குழந்தை பருவத்து நியாபகங்களுக்கு இதை விடவும் அவளை வஞ்சம் தீர்க்க வேறு சூழ்நிலைகள் அமைந்து விட போவதில்லை என்ற களிப்பு. சிறு வயதில் அவள் எனக்கு செய்ததை போலவே கண்களை விரைத்தேன். ஆனால் அவள் என்னை போல் இருப்பதில்லை... முதல் பார்வையிலேயே அடங்கிவிடுகிறாள்.

அப்பெண் இப்போது என்னை பார்த்து புன்னகைக்க துவங்கியிருந்தால். அறிமுகங்கள். உபசரனையான பரிமாறல்கள். எங்கள் ப்ளாட்டின் எதிர் ப்ளாட்டில் வசிக்கிறாள். அவளுக்கு தமிழ் தெரியாது. எனக்கு தெலுங்கு தெரியாது. நாங்கள் இருவரும் புரிந்து கொள்ளுமாறு பேசுமளவிற்க்கு இருவருக்கும் இவ்வூரின் கன்னடம் தெரியாது. சர்வதேச மொழி கை கொடுத்தது.

"After you settle down, we will talk much..." என்றவளுக்கு புன்னகையுடன் விடைகொடுத்தேன்.

"பக்கத்துல பொம்பள தான் இருக்கு. ரெண்டும் பேரும் நல்லா இங்கிலீஷ்லயே பேசிகிறாங்க என்று கோவையில் இருக்கும் அப்பாவுக்கு போனில் தகவல் சொன்னாலும். அதற்க்கு பின் மீண்டும் அம்மா - மகள் விளையாட்டு ஆரம்பம் தான்.

"என்ன பாக்குற... போ ஆந்தம்மா மாதிரி நீயும் போய் ஒரு புல்புல்தாரா உடுப்ப மாட்டிக்கிட்டு வா. எல்லா பொருளையும் எடுத்து அடுக்க வேணா...?"

"ஏய் அம்மா...! அது மேக்ஸி"

"என்னவோ... அந்தம்மா பேர் என்னவாம். ஏன் இப்படி தலையை விரிச்சுபோட்டு வெளிய நிக்குதாம்."

"நீ இப்படி கேப்பேன்னு தான். இங்க யாரும் வெளியேவே வற்றதில்ல. அவங்க வீட்டு வேலைக்கார பொண்ணு வர நேரமாம். அதுக்காக கதவை திறந்தாங்களாம். நாம சாமான் இறக்க சத்தம் கேட்தும் அப்படியே நின்னுட்டாங்க."

"ஓ..! அந்த வேலைக்கார பொண்ணு இங்க ஒரு நாள் ஒத்தாசிக்கு வருமா...? எல்லத்தையும் ஒத்த ஆளா ஒதுக்க சிரமம இருக்குல்ல.."

புதிதாக துளிர்த்த உறவின் அழகே, நிச்சயம் செய்வார்கள் என தெரிந்தும்... அதை தயங்கி தயங்கி கேட்பது போல் நடிப்பது தான். பச்சையம் மாறாத... முதல் உபசரிப்பு. வீடெங்கும் ஓவியங்கள். குறிப்பாக அந்த டைனிங் டேபிளின் மேல் மாட்டியிருந்த ஓவியம். ஆண் குறி.. அதை சுற்றிய ஒரு கருவறை அதற்க்குள் கைகளை குவித்திருந்ததை போல் ஒரு சிசு. ஏராத்தாள அனைத்து வண்ணங்களும் பயன்படுத்த பட்ட ஓவியம். குறிப்பாய் நீல நிறம் அதிகமாக கண்களை உருத்தியது. ஓவியத்தில் இருந்து எடுத்த கண்களை அப்பெண்ணின் மீது வைத்ததுமே புரிந்து கொண்டாரள்..

"No its not me, my husband. He is a Drawing Professor"

என்ற விளக்கத்துடன் வேலைக்கார பெண்ணை அனுப்புவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தாள்.

***************

அன்று ஒத்தாசைக்கு கென்று வந்தவள். நேற்று தான் அவள் முதல் மாச சம்பளத்தை வாங்கினாள். வீட்டில் பொருட்கள் அதனதன் இடம் சேர்ந்ததும் அம்மாவும் அவள் இடம் சென்று சேர்ந்து விட்டாள். தினமும் காலையும் மாலையும் அவளிடம் இருந்து போன் வரும். "வேலைக்கார பொண்ணு வந்துச்சா... இன்னிக்கு என்ன சமையல்.. எதுத்த வீட்டு அம்மா பேசுச்சா. ஏதோ ஒரு அம்மா உன் வீட்டு பக்கத்துல இருக்குன்னு மனசு கொஞ்ச சமாதனம்." என்று தினமும் அதே கேள்விகள், அதே பேச்சு. சில பேச்சுக்களும் சில குரல்களும் மட்டும் தான் மனதிற்க்கு அலுப்பதேயில்லை. இந்த பேச்சுக்காளால் அன்றைய நாளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிட போவதில்லை என்றாலும். எதிர்பார்த்தவர்களிடமிருந்து எதிர்பார்த்த நேரத்தில் வராத பேச்சுக்களும்.. செய்திகளும்,  மனதின் சரியான வசிப்பிடத்தை அதன் கனத்தை கூட்டி காட்டிவிடுகிறது. காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் கணவரை தவிர்த்து,  மதியத்தில் வேலைக்கு வரும் ரத்னாம்மா தான் ஒரே பேச்சு துணை. அதுவும் ஒரு மணி நேர பேச்சு துணை.

கழுத்தில் கருகு மணி.. குள்ளமான உருவம். பெரும்பாலும் சேலைக்கு பொருத்தமான ஜாக்கெட்டை போடமாட்டள் ரத்னாம்மா.  சிறு நாற்காலி.. கால் மீதி என அனைத்தையும் நகர்த்தி நகர்த்தி சுத்தம் செய்யும் ரத்னாம்மாவின் வேலையில் அன்று நிறைய மாற்றங்கள். கண்கள் ஓரிடத்திலும் யோசனை வேறிடத்திலும் என்பதை அவள் தொழில் நேர்த்தியே காட்டியது. "எதாவது பிரச்சனையா...?" என்று கன்னடத்தில் திக்கி திக்கி கேட்டு முடித்தேன்.

மிகுந்த தயக்கத்துக்கு பின். இரண்டு அறைகள் சுத்தம் செய்த பின்... மெல்ல தரையை துடைத்தவாறே அழத்துவங்கினாள். இந்த புதிய நகரத்தில் எனக்கு பழக்கமான ஓர் உறவு, என்னோடு பகிர்ந்து கொள்ளும் முதல் கண்ணீர் இது. அந்த பொறுப்புணர்ச்சியுடன் சோபாவில் இருந்து கீழிறங்கி அவள் அருகில் தரையில் அமர்ந்து கேட்டேன்.

"ஹேனாய்த்து..."

இன்று வேலைக்கு பத்து நிமிடம் தாமதம் என்பதால்... எதிர்த்த வீட்டு பெண் கன்னத்தில் அறைந்துவிட்டதாக சொன்னாள். இந்த செயல் கூட எதிர்த்த் வீட்டு பெண்ணின் உருவத்திற்க்கு சம்மந்தம் இல்லாத ஒரு செயல் தான். "சரி... விடுங்க.. இனிமே நேரத்தில போங்க.." என்று அவள் மொழியில் சொன்னாளும். அவள் தொடர்ந்து சொன்ன செய்திகள் எனக்கு கடந்த வாரம் நான் யூகித்த ஒரு விஷயத்தை உறுதி செய்வதாகவே இருந்தது.

தீபத்திருநாள் வருவதற்க்கு இன்னும் 5 நாட்கள் இருந்த வேளையில். எதிர்த்த வீட்டு பெண் என்னை இண்டர்காமில் அழைத்து. பக்கத்து ப்ளாக்கில் ஒரு ப்ளாட்டில் ஒரு பெண் கைவேலைபாடுகள் நிறைந்த தீபங்களை விற்பதாகவும். அதை பார்த்து வரலாம் என்றும் கூறி என்னை அழைத்தாள். அவள் குறிப்பிட்ட நேரத்தில் என் ப்ளாட் கதவை பூட்டிவிட்டு காத்திருந்தேன். அவள் ப்ளாட்டில் இருந்து வெளியே ஒரு காகிதத்துடன் வந்தாள்.

"கண்காட்சி நடப்பதற்கான நோட்டீஸ் அது. அதில் கண்காட்சி நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த தேதி முடிந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. அது தான் முடிந்துவிட்டதே பின்பு ஏன் செல்கிறோம் என்று கேட்டேன். எல்லா பொருட்களுமா வித்து தீர்ந்திருக்க போகின்றன... போய் பார்க்கலாம் என்றவாறே நடக்க துவங்கியவளை பின் தொடர்ந்தேன். அவளுடனான நான் செலவிட்ட முதல் மற்றும் நீண்ட பொழுது அதுதான். பேசத்துவங்கிய 10 நிமடங்களில் எல்லாம் மிக பளபளப்பாய் தெரிந்தது, அப்பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய பெருமையே இப்படி ஒரு நகரில் சொந்த ப்ளாட் வாங்கியிருப்பது தான் என்பது. அத்தோடு அம்மா ஒரு ப்ளாட்டில் சென்னையிலும். தங்கையின் கணவர் சமீபத்தில் இறந்ததால் அதில் வந்த இன்ஸ்யூரன்ஸ் பணத்தில் மும்பையில் ஒரு ப்ளாட்டில் தங்கை இருப்பதாகவும் சொன்னாள். ஏன் எல்லோரும் ஒரே ப்ளாட்டில் ஒன்றாக இருக்க வேண்டியது தானே என்றேன்.

"How come its possibleeeeeeeee..." என்று முக்கியமான வார்த்தைகளை மிகுந்த அழுத்துடன் சொல்வது அவள் இயல்பாய் இருந்தது. கண்காட்சி நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த  ப்ளாட் பூட்டியிருந்தது. வாருங்கள் கிளம்பி விடலாம் என்றேன். அதன் பிறகு அப்பெண் என்னை கவனித்ததாக எனக்கு நினைவேயில்லை. விளையாட்டு பொருட்கள் நிறைந்த மைதானத்தை ஆர்வமுடன் பார்க்கும் குழந்தையை போல் ஒவ்வொறு ப்ளாட்டாக சென்று காலிங் பெல் அடித்து கண்காட்சி நடக்கும் ப்ளாட்டை குறித்து விசாரித்தாள். அனைவரும் சொன்ன பதில்கள் எதையும் கூட அப்பெண் காதில் வாங்கியதாக எனக்கு தோன்றவில்லை. அந்த தளத்தில் மொத்தம் 8 வீடுகள். இத்தோடு மூன்று வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி விட்டாள். எனக்கு ஒரே கூச்சமாக போனது. "ஏன் இப்படி செய்கிறீர்கள்... அது தான் தெரியவில்லை என்று அனைவரும் கூறுகிறார்களே... வாங்கள் சென்று விடலாம்" என்றேன். இப்பொது நான் காம் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி கொண்டிருந்தாள். மிக அதிசயமாய், நான்காம் ப்ளாட்டின் கதவை திறந்த ஒரு பாட்டி, வந்தவரை "உள்ளே வாங்க" என்று கன்னடத்தில் அழைத்தது.  நான் உள்ளே செல்லவில்லை. உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் வெளியே வந்தாள்.

"they gave me coffee....such a sweet people.." என்று எங்கள் ப்ளாக்கை நோக்கி நடக்க துவங்கினாள். நான்,  கண்காட்சி என்றேன். "they are not there know?" என்றாள். அது தான் வீடு பூட்டியிருந்த போதே நமக்கு தெரியுமே... நீங்கள் அவர்களை பற்றி விசாரிக்கத்தானே இத்தனை வீட்டின் கதவை தட்டினீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டதால் என் வெறுப்பும் கோபமும் அவ்வளவாக வெளிப்படவில்லை.

"this... I use to do normally ya..."

"which...?"

"ringing other door bells..."

ஒரு வேலை குழந்தை மனம் மாறாத பெண்ணாய் இருப்பாளோ என்று நினைத்த என் யூகத்தை அடுத்த இரண்டு நாட்களில் எல்லாம் உடைத்தாள். ஒரு மணி நேரம் அவளுடன் முழுதாய் செலவழித்த என்னை... அதுவும் இது போன்ற விசித்திரமான செயல்களில் அவள் உடன் இருந்த என்னை... அன்று லிப்டில் எதேர்சயாக பார்த்தும். என்னை யார் என்றே அடையாளம் தெரியாததை போல் புன்னகைக்காமல் என் கண்களை சந்திக்காமல் புறக்கணித்தாள். ஒரு வேளை எதாவது மனம் சோர்வாக இருக்கும்,  என்ற என் எண்ணத்தை அதை தொடர்ந்த நாட்களில் உடைத்தாள்.

"hey you know for me lift means fear...ya.." ஒன்றும் புரியாமல் விழித்த என்னிடம் "because I am a heart patient...due to diwali. Every body burning crackers... I am afraid... am running out of my tablets.."

இது போல் பல முறை இப்பெண்ணை குறித்து விடை தெரியாமல் இருந்த என் அனுமானங்களுக்கு ரத்னாம்மாவின் கன்னத்து அடி பதில் சொன்னது.

ரத்னாம்மா கன்னடத்தில் இப்போது தொடர்ந்தால்..."இது புதுசில்ல... எப்பவும் இப்படி தான். சில நேரம் பேய் மாதிரி தலையெல்லாம் விரிச்சு போட்டுட்டு தாலிய கழட்டி வீசிட்டு எனக்கு வாழவே புடிக்கல ரத்னா. இவ்ளோ பெரிய வீடு... பொண்ணு ஹாஸ்டல்ல படிக்குது... அவரு வேலைக்கு போய்ட்றாரு.. நான் என்ன பண்றது ரத்னான்னு.. என்ன உடம்ப போட்டு அழுதுகிட்டே உலுக்கும். நான் சாகறேன்... நான் சாகறேன்... அடிக்கடி சொல்லும். இந்தம்மா தீடிருன்னு செத்துட்டா போலீஸ் கீலீஸ் வந்து என்ன தானே கேள்வி கேப்பாங்க.

ஏன்ன... அந்த அம்மா வீட்டுக்குள்ள தினமும் போற வெளியாளு நான் தான். இன்னிக்கு அந்தம்மா என்னை அடிச்சதும்..என்ன பன்றதுன்னு புரியல.  ஸ்டோர் ரூம் செக்யூரிட்டி எனக்கு சொந்தம் அவர் மூலமா இந்த அம்மாவோட கணவரின்  போன் நம்பர் வாங்கி, இன்னிக்கி நடந்தத சொன்னேன். அதுக்கு அவரு இந்த அம்மாவுக்கு மனநிலை சரியில்லைன்னும். அவரு  பொண்ண பார்க்க வெளியூருல இருக்கறதாகவும்... இரண்டு நாள் போறுத்துக்க வந்திட்றேன்னும் சொல்றாரு. ஒரு மாசத்துல நாலு அஞ்சு நாள் இப்படி ஆகும் மத்த நாள்ல எல்லாம் அவங்க பொண்ணு மாதிரி பாத்துக்கும் அதுக்கு தான் பொறுத்துகிட்டு இருக்கேன் என்று அவள் சொல்லவும்.......

/////"நான் சாகறேன்... நான் சாகறேன்... அடிக்கடி சொல்லும். இந்தம்மா தீடிருன்னு செத்துட்டா போலீஸ் கீலீஸ் வந்து என்ன தானே கேள்வி கேப்பாங்க. என்ன அந்த அம்மா வீட்டுக்குள்ள தினமும் போற வெளியாளு நான் தான்."/////   என்று கம்மிய குரலில் கண்களில் நீரை துடைத்தவாறே பதற்றத்துடன் அவள் கூறிய விதம் எனக்கும் பதட்டத்தை கூட்டியிருந்தது. யாருகிட்டயும் சொல்லிடாதிங்க என்ற வேண்டுதலுடன் ரத்னாம்மா  சென்றபிறகு. என்னாலும் இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை.... இத்தனை நாளும் உட்சபட்ச விரக்தியில் இருக்கும் ஒரு பெண்ணுடனான நம் சவகாசம். என்று நினைக்க நினைக்க இண்டர்காம் அதிர்ந்தது.

எடுத்தேன்..."hai its me.. what are you doing..." என்றாள்.

"சற்று முன்பாக உரசியிருந்த தரை என்பதால், மெல்ல வழுக்கியது எனவே சுவரை கெட்டியாக பிடித்தவாறே.."I am busy" என்றேன்.

எப்போதும் போல் அவள் நான் சொல்வதை கேட்பதில்லை. பேப்பர் காரன் கொடுத்த பில் அதிகமாக இருப்பதாக அங்கலாய்த்தாள். நான் தனிந்த குரலில் இல்லை எனக்கு கொடுத்த பில் சரியாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது என்றேன். இது தான் நான் அவள் கூறுவதை மறுப்பது முதன் முறை. அதை தொடர்ந்த வாதங்களில் அவள் சிரித்த குரல், புன்னகையாக குறுகியது இப்போது அவள் உச்சநிலையில் இருந்திருக்க வேண்டும். "பொருக்கி.... ராஸ்கல்.. ப்பக்கர்.." என்று சம்மந்தமே இல்லாமல் கொதித்த அப்பெண்ணின் குரலை கேட்கையில் அவள் கூறியதை எல்லாம் மறுத்தத்ற்க்காக என்னை திட்டுகிறாளா.. அல்லது பில்லை தவறாக கொடுத்த பேப்பர்காரனை திட்டுகிறாளா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

மீண்டும் அன்று மாலை அம்மாவிடமிருந்து போன்.. அதே பேச்சு... ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கூடுதலாய்.  எதிர்த்தவீட்டு அம்மா நல்லா பேசுதில்ல...!வேறு யாராச்சும் கதவ திறந்தாங்களா...?!

- கனக தூரிகா.

............

Monday, January 9, 2012

சற்குருவும் SANTA க்ளாசும்....... 1

"அக்கா... மொபைல் போன் எல்லாம் எதாவது இருந்தா கொடுத்துடுங்க..." என்று பாட்டி வைத்திருக்கும் சுருக்கு பை போன்ற ஒன்றை என் முன்னால் நீட்டினார் ஈஷா சுவாமி. இன்னும் அரை மணி நேரம் தான்....! என்னை போல் உலகில் சஞ்சரிக்கும் அனைத்து உயிரையும் உருக்கி அச்சில் வார்த்தார் போன்ற பிரமாண்ட இருப்பு. ஒவ்வொறு நொடியும் மனம் தகதகத்து கொண்டிருந்தது அந்த பேரொளியை காண.  அந்த ஆசிரமத்தின் குடிலை சுற்றியிருந்த அத்தனை மரங்களும் இனி என்னாளும் அவர் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்கி.... ஓங்கி ஒற்றை காலில் தவம் புரிவது போன்ற அழந்த மெளனத்தில் திளைத்திருந்தது. இலைகள், கிளைகள் என அதன் வேர் வரை பரவி கிடந்த அந்த ஏக்க மெளனத்தை அவ்வப்போது தலை வருடி ஆசுவாசப்படுத்தின வெள்ளிங்கிரி மலைக்காற்று.

ஓங்கரித்த மெளனத்தினிடையே ஓர் ஒற்றை மரத்தின் நிழலின் கீழ் அகண்டு கிடந்தது பாறை ஒன்று. அதில் அமர்ந்த சில மணித்துளிகளெல்லாம்  அப்பாறையின் ஏற்ற இறக்கங்கள் சில அந்தரங்க பாகங்களை மெல்லிதாய் பதம் பார்த்தன. செருப்புகள் அற்ற என் கால்களை பார்க்க சற்றே வித்தியசமாய் இருந்தது. கூதிர் காலத்தின் அடையாளங்கள் என் கால்களின் எல்லைதோரும் பாள் பாளாய் வெடித்து திரிந்திருந்த சாம்பல் நிற கோட்டினில் பயணம் செய்தது. மண்ணில் மட்டுமே பதிந்து வந்த காலடி சுவடுகள் இன்று வித்தியாசமாய் இலை சருகுகளின் மீது படர்ந்திருந்ததை பார்க்கையில் வித்தியாசமாக இருந்தது.

இதற்கு முன்பு சற்குருவை தீர்த்தகுண்டம் முன்பாக தரிஷன நேரத்தில் பார்த்தது... பின்பொரு முறை பத்திரிக்கையாளர் என்ற பெயரில்..( அழுத்தி அடிக்கோடு இட வேண்டிய வார்த்தைகள்...பத்திரிக்கையாளர் "என்ற பெயரில்" ) சற்குருவை பார்க்க திருட்டு பாஸ் வாங்கி உள்ளே நுழைந்திருக்கிறேன்.  ஆனால் இரண்டு சந்தர்பங்களிலும் அவர் என்னை பார்க்காதது போல் எனக்குள் ஒரு மாயை. நினைவில் திரண்ட வரை சரியாக இரண்டு முறை அவர் கண்கள் என் கண்களை சந்தித்தன.

ஓராண்டுக்கு பின் அவரை தனியே சந்திக்கும் வாய்ப்பை ஏற்ப்பட்டுள்ளது. அவரை பார்த்தால் என்ன பேசலாம்... என்ன கேட்கலாம் என பல கேள்விகள் கண்களை உருத்தி வந்த தூசு துகள்களுடன் என் மனதையும் உருத்தியே வந்தது. தலையில் கட்டு.... பஞ்சாபி ஸ்டைலில் ஒரு கச்சை பைஜாமா... அனைத்தும் காவியில். கையில் லேப்டாப் என நவீனமும் சங்கமும் கலந்த ஒரு பாவனையில் நுழைந்தார் ஒரு சுவாமி. அருகில் நெருங்க நெருங்க விபுதி வாசம்... அதையும் கடந்து வேறுறொரு வாசம் எனக்கு படைத்தல் தொழிலானால் அந்த வாசத்திற்க்கு ஒரு பூவை படைத்திருப்பேன். இந்த இறைவனின் சந்நிதியில் அது வெறும் வாசமாக மட்டுமே இருந்தது. தூரத்தில் இருந்தும் மிக அழுத்தமாக தெரிந்தது அவர் காதுகளின் ஈடுக்களில் ஒத்தியிருந்த விபுதிகீற்றுக்கள்.

என்ன.. சற்குரு அப்பாய்ன்மென்ட்டா என்றார்.....? புன்னகைத்தவாறே.

சற்குருவை சந்திக்க வந்திருந்த எங்கள் குழு,  ஆமாம் என்று ஆமோதித்தோம். குழு என்ற வார்த்தையை கழித்து பார்த்தால் நான் வெறுமனே அமர்ந்திருந்ததேன். அங்கு நடக்கும் புன்னகை பரிமாறல்களுக்கும், உபசரிப்புகளுக்கும் இடையே ஒரு பார்வையாளராய் நான். இந்த முறை மிக சிறிய குழு மூன்று பேர் தான் இருந்திருப்போம். அதிலும் மூன்றாம் நபர் சற்று நேரம் கழித்து எங்களோடு சேர்ந்து கொள்வதாய் பேச்சு. ஆக இரண்டே பேர்.

இந்த முறை சற்குரு என்னை பார்த்தே ஆக வேண்டும். ஒரு வார்த்தை ஏனும் என்னிடம் பேசியே ஆக வேண்டும். அவர் தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற உறுதி தென் கைலாயத்தை போல் மிக உறுதியாய் வளர்ந்திருந்தது. இறைவனை மிக பக்தியோடு பிரார்த்திக்கிற பக்தர்கள், எதோவொரு வேண்டுதலை செலுத்துகிற போது காற்றில் சாமி தலையில் இருந்து தவறி விழுகிற பூ, வேறுவழியே இல்லாமல் கனவில் நாம் உருவாக்குகிற சாமி பிம்பம் என இவை அனைத்தும் எதோவொரு வகையில் நாமும் கடவுளுக்கு மிக நெருங்கிய உறவு என்பது போன்ற மாயை ஏற்படுத்தி விடுகின்றன. அதே நிலையில் இப்போது நானும். என்னற்ற முறை நடந்த நல்ல நிகழ்வுகளுக்கெல்லாம் சற்க்குருதான் காரணம் என்றும்....  பல முறை நானாகவே உருவாக்கி கொண்ட வருத்தங்களுக்கும் அவர் தான் காரணம் என்றும்... எதற்க்கும் காரணம் இல்லாத அவரை காரணப்படுத்தியிருக்கிறேன். மொத்தத்தில் சூட்சும வடிவில் நெருங்கிக்கிடக்கிறது எங்கள் உறவு என்பது என் எண்ணம். எனக்கும் அவருக்கும் நடக்கவிருக்கும் உரையாடல்கள் நிச்சயம் என்னோடு வ்ந்திருப்பவர்களெல்லாம் பொறாமையை அல்லது குறைந்தபட்ச அங்கலாய்ப்பை ஏற்படுத்த கூடும் என்பதை எண்ணி வருத்தமாகவும் இருந்தது.

அதே கட்டு, அதே கச்சை, அதே காவி ஆனால் இந்த முறை வந்த சுவாமி மாத்திரம் வேறு. உள்ளே வாங்க என்று எங்களை அழைத்தார்... ஏரத்தாள தரையிலிருந்து ஒரு மூன்று அங்குலம் மட்டுமே உயர்ந்திருந்த பாறையிலிருந்து எழும்ப எனக்கு சிரமமாகவே இருந்தது. ஷம்போ என்று பெறுமூச்சு வாங்கி எழுகையில்... இது கூட எங்கள் சூட்சும உறவின் ரகசிய பாஷையாகவே மனம் கதகதத்தது.

ஒவ்வொறு சருகுகளையும் அதை கடந்திருந்த ஒவ்வொறு கற்களையும் எண்ணி எண்ணி மிக கவனத்துடன் கடந்தேன்... இதில் எத்தனை கற்கள் அகலிகையாக மோட்சம் பெற காத்திருக்கின்றனவோ... என்ற எண்ணம். அப்படி சாபம் வாங்கி இங்கு கல்லாகவோ, சருகாகவோ இருக்கும் எவைகளும் என்னுடன் அதன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளலாம். நானும் அவரும் மிக நெருக்கம் உங்கள் சாப விபோட்சனங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்... யார் வேண்டுமானலும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற  அறிக்கையை காதின் செவிப்பறையை தாண்டி அடிக்கும் இதயத்துடிப்பின் சப்தத்தையையும் பொருட்படுத்தாமல் அந்த சருகுகளிடமும் கற்களிடமும் தெரிவுப்படுத்தினேன்.

நடந்து கடக்க வேண்டிய தூரம் முடிந்த போது தான் .... "அடடா நம் அறிக்கையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என சொல்ல மறந்துவிட்டோமே என்ற எண்ணம். இப்போது மனதை விடவும் கண்கள் அதன் உச்சத்தில் செயல்பட துவங்கியிருந்தது. கண்களின் உட்சபட்ச செய்லாற்றலை பயன்படுத்தியும் நான்கு தூண்களை தாண்டி எதுவும் தெரியவில்லை.

அந்தரங்கமான பாகங்களில் சில நேரம் கண்களையும் சேர்த்துவிடலாம். இத்தனை நேரம் உடலை அசைக்காமல், யாருக்கும் தெரியாமல் எம்பி எம்பி தோற்றுப்போன என் பார்வையை உணர்ந்து இப்போது எம்ப ஆரம்பித்தது என் குதிக்கால். எதற்க்கு இத்தனை மென்மை. எதற்க்கு இத்தனை நிதானம். எதற்க்கு இத்தனை நிசப்தம். ஒரு பெண் இத்தனை மெதுவாக நடந்தால் நாணம் என்று சொல்லிவிடலாம். ஆனால் காட்டில் நகங்களை மெல்ல பதித்து அசைவுகளில் மட்டுமே நகர்ந்து செல்லும் சிங்கத்தை... அதுவும் இந்த ஆறடி சிங்கத்தை ???. நடையின் கம்பீரம் தாங்கி... அந்த இடக்காலில் கனத்து கிடக்கும் அந்த செம்பு தண்டையின் முறுக்கு. முகம் முழுவதையும் மறைத்து கிடக்கும் அந்த வெண் இறகுகளின் உச்சியில் கூர்ந்திருக்கும் பார்வை... இறகுகளின் மத்தியில் முரண்டு நிற்க்கும் மீசை. இன்று தலைபாகை இல்லை. பைஜாமா குர்தாவில் கைகள் நுழைத்து மெல்ல அசைய அசைய... இப்போது என் இதயத்துடிப்பை என் அருகில் இருந்தவருக்கு கூட கேட்டிருக்கலாம்  என்று பதற்றமானது மனம். ஆம்!!  என்னருகில் இருந்தவர் எந்த சம்மந்தமும் இன்றி தீடிரென  என்னை திரும்பி பார்த்தார். வந்ததும் என் ஜாதகத்தையே சொல்லி, என் வருங்காலம் பிரமாதம் என சொல்ல போகிறார். நேற்று இரவு தியானம் செய்த போது கூட எதோ என் காதுகளில் கிசுகிசுத்தாரே அதை இன்று உரக்க சொல்வாரோ... என எழும்பி அடங்கின பல கேள்விகள்.

அவர் உருவத்தை விடவும் மெளனமாக கர்ஜித்தது அவர் நமஸ்கரிக்க குவித்த கரங்கள். நான் எதிர்பார்த்து போலவே முதல் வலையிலேயே சிக்கின அவர் கண்கள். கண்களின் சந்திப்பிற்க்கு பிறகு பொங்கி பிரவாகம் எடுத்தது என் ரகசிய பெறுமை. திளைப்படங்கும் முன் அருகில் இருந்தவரிடம் என்னை காட்டி கேட்டார்.... "யாரிந்த அம்மா.....?"

தொடரும்......