Monday, August 29, 2011

அம்பாள் மகள்... - கனக தூரிகா

அப்படி ஆகியிருக்க வேண்டாம் தான். "கண் திருஷ்டி கழிஞ்சது" என்று பாட்டியும், பாட்டி வயது ஒத்ததுகளும், இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்.... பெரும்பாலும் ஒன்னு... இரண்டுக்கு அப்பறம் தான் நிக்குது, எங்க வீட்டுல கூட இப்படி நடந்ததுண்டு என்று வெறும் ஆறுதலாய் அடையாள அட்டை நீட்டி கொண்டும், உடல் தேருவதற்க்கு உபயோகப்படுமோ இல்லையோ நமக்காக மனிதர்களும்.... அவர்களின் அக்கறைகளும்.... சில ஆப்பிள்களாகவும், அரை கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில்களாகவும் வீட்டிற்க்கு வருவது மனதிற்க்கு சமாதனம். வீட்டிற்க்கு வெளியே இருக்க வேண்டிய மூன்று நாட்களில் நான் சாப்பிட்ட எச்சிலை வெளியே எறிகிற போது அம்மா மிக ஜாக்கிரதையாய் இருப்பாள். 

"இப்ப இந்த எச்சில நாயோ இல்ல மத்ததுகளோ சாப்பிட்ட உனக்கு தான் புள்ள வயிறு வலிக்கும்..." என்று நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது அம்மா சொன்னது இப்போது நியாபகம் வந்து தொலைக்கிறது. அவள் சொன்னபடி பார்த்தால் எப்படியும் ஒரு பத்து இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் என் எச்சிலை என்றாவது சாப்பிட்டிருக்க வேண்டும். அப்படியோரு வலி அடிவயிற்றில் வந்த பிறகு தான் இப்படியும் ஒரு பாகம் என்னோடு.... இத்தனை ஆண்டுகளாய் சேர்ந்தே இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.  இன்னும் சில நாட்களில் உயிரோடும்.... உடலோடும் பார்த்திருக்க வேண்டியதை வெறும் உதிரமாக பார்த்திருக்க வேண்டாம் தான்.

அது முடிந்து ஆறு மாதங்கள் இருக்கும்.
"இன்னிக்கு அவ சந்தான லட்சுமி கோலத்துல வர்றா... பார்க்காம தூங்கிடாதே. தேங்காய் பழமேல்லாம் முன்னாடியே வாங்கி வச்சுக்க" என்று கூறியபடியே என் நெற்றியில் நகக்கீறல்களோடு பதிந்து தாத்தா வைத்த திருநீறு.  எங்கு எப்போது அவள் பயணத்தை தொடங்கினாலும் என் வீடு வந்து சேர மணி நள்ளிரவு 3 க்கு மேலாகி போகும். எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற தவிப்படங்க இத்தோடு இரண்டு முறை குளித்து மூன்று முறை முகமும் கழுவியாயிற்று. நானும் அப்பாவும் அவளை பார்த்து விட்டு உறங்குவதில் மிக உறுதியாகத்தான் இருந்தோம். 24 மணிநேர செய்தி தொலைகாட்சிகளின் அருமை அப்போது தான் புரிந்தது. அன்றைய தினத்தின் முதல் இரண்டு மணி நேரம் எதை போடுகிறானோ அதைத்தான் 24 மணி நேரமும் போடுகிறான் என்ற போதும்.. இது எட்டாவது முறை, முதல் வரியை கேட்டதும் முழு செய்தி தொகுப்பே நினைவில் திரளும் அளவிற்க்கு மனம் பழகிவிட்டது. பழகிவிட்ட பின் அது பழையது தான். பழையதுகள் சலிப்பையும் பின்பு தூக்கத்தையும் தந்தன. அடிக்கொருமுறை இரவில் விழிப்பு வர, இன்று வழக்கத்திற்க்கு மாராய் பல முறை தண்ணீரும் குடித்தாயிற்று. இறுதியாய் தொலைக்காட்சியில் தங்கத்தின் இன்றைய விலை என்று செய்தி ஓடி கொண்டிருந்ததாக நினைவு.....

பட...பட...பட... வென அதிர்ந்த சப்தத்தில் கண்விழித்தெழுகையில் மணி நள்ளிரவு 3.35. அது தாத்தா தான்...
 "எப்படியும் நீ தூங்கிருவேன்னு தெரியும்... அதான். அம்மா அடுத்த தெருவுல தான் நிக்குற. போய் முகம் கழுவி தேங்காய் பழத்தோட நில்லு" என்று சொல்லி போனார்.

அவர் கண்களில் இருந்து தூரம் தூரமாய் நகர,  உருமிஅடி பக்கம் பக்கமாய் என் காதுகளில் விழுந்தது. வெளியே தேங்காய் பழத்தோடு நானும் அப்பாவும் நின்றிருந்தோம். பக்கத்து வீட்டு கண்ணம்மா பாட்டியும் தேங்காய் தட்டுடன் நின்றிருந்தாள். என்னை பார்த்ததும்,  அந்த நள்ளிரவில் முன்னும் பின்னும் பார்த்தபடி வேலியோரமாய்  வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு

"ஏய்... செல்வி எப்ப வந்த...."

ரெண்டு வாரம் ஆச்சு கண்ணம்மா"

"ஆடிக்கு அம்மா வீட்டுக்கு வந்தியோ..."

"ஆமா.... இன்னிக்கு எங்க சாமி வருது கண்ணம்மா.... அதுக்கு பூஜை பண்ணதான் நிக்கிறோம்."

"அய்யோ தெரியாது பாருங்க.....20 வருஷமா இங்கதான் இருக்கேன். இங்கிருந்து எட்டு வீடு தள்ளி இருக்கா உங்க சாமி. அதென்ன உங்க சாமி... நம்ம சாமின்னு சொல்ல மாட்டியோ கல்யாணம் ஆகிட்டாளே இந்த பொட்ட புள்ளைகளுக்கு எல்லாம் வேற தான். உங்காத்தா தண்டுமாரிக்கு நான் கூட தான் நேத்து தாலி வரி கட்டியிருக்கேன்... என்னை உங்க ஜாதி சனத்தோட எத்துக்க மாட்டிகளோ"

"அப்படியேல்லாம் இல்ல கண்ணம்மா எதோ சொல்லுத்தவறிப் போச்சு...
இன்னிக்கு மாரியாத்தாக்கு சந்தான லட்சுமி கோலமாம். தாத்தா வந்து சொல்லி போனாரு"

"வரட்டும் வரட்டும் நல்ல வரட்டும்... இன்னிக்கு வீதில வாரா நாளைக்கு உன் வகுத்துல வருவா..."

கண்ணம்மா பேச பேச..... இரண்டு சிறுவர்கள் கையில் பெரும் குச்சியோடு வந்தனர்... எல்லா  வீட்டின் வாசலில் இருக்கும் கரண்ட், டெலிபோன், கேபிள் ஒயர்களையேல்லாம் தூக்கி முட்டு கொடுக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. எல்லா வருடமும் இவன்களுக்கு பின்னால் தான் அவள் வருவாள். இந்த வருடமும் அப்படித்தான்.  தேர்க்கால் மெல்ல அசைய அசைய முன்னும் பின்னும் கைகள் போல் வீசின... தேர் வண்டிக்கென்று அலங்கரிக்கப்படிருந்த மல்லிகை பூச்சரங்கள்.  கரண்ட் ஒயர்களை முட்டுகிற உயரம் இல்லை தான்.... சொல்லப்போனால் அது தேர் கூட இல்லை தான். இருந்தாலும் அந்த வளவளப்பான கும்மிருட்டில் குலைந்து போய், பூச்சரங்களோடு குலுங்கி குலுங்கி அவள் வந்த பேரழகில், அந்த இரண்டு சக்கர வண்டி தேராகவே ஆகிவிட்டிருந்தது.   என் நெற்றியின் நேர் எதிர்க்க அம்மனின் பாதம். இரண்டு வயது குழந்தையின் கால் அளவிலான முத்து கொலுசு துளிர்த்து கொண்டிருந்தது. கருநீல பட்டில்... பலத்த சிங்காரத்துடன் சிரித்த அவள் கையில் ஒரு பார்பி பொம்மை. அதற்க்கும் ஒரு பட்டு துணி போர்த்தி..... முள்ளை பூகோர்த்து அலங்கரித்தார்கள். அம்பாளுக்கும், அவள் குழந்தை பார்பிக்கும் சேர்த்தே தேங்காய் பழம் உடைத்தோம்.

எங்களை கடந்து சென்ற தேரின் பின் புறம்,  அபிநயம் பிடித்தபடி,  பல நூறு உயிர்களை ஒருங்க முறுக்கிய இருக்கத்தோடு நீண்டிருந்த அந்த கரும்ஜடையின் இறுதியில்  இக் வடிவில் முடிவுற்ற மூன்று குஞ்சங்கள் மனதை பிசைந்து போனது.. அந்த அசைவு கண்களில் இருந்து மறைந்து மறைந்து இப்பொது தொலைந்தே விட்டது. தேரின் விளக்கு அலங்காரத்திற்க்கு என்று கட்டை வண்டியில் ஏற்றியிருந்த ஜனரேட்டர்கள் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஒலியோடும் , ஒரு குழியில் ஏறி இறங்கிய அந்த தேரின் அசைவிலும், சட்டென்று அரைந்த காற்றிலும், முகத்தை தடவி சென்றன லில்லி பூச்சரங்களின் வாசத்தோடும், கண்களில் படர்ந்திருந்த நீல நிறத்தில் இருந்து அம்மனின் முகத்தை மீண்டும் ஒருமுறை மீட்டேடுத்து கொண்டிருந்தேன்.

அன்று இரவு முழுவதும் நீலம் தான். எதோ எதோ கனவுகள் வந்து மறைந்ததாய் நியாபகம் இருந்தும், நினைவில் இருந்து உருபி எடுக்க முடிந்ததென்னவோ நீலம் மட்டும் தான். இந்த தெருவோடு சேர்த்து மொத்தம் எழு தெருக்கள். அவள் எப்படியும் கோவில் சேர மணி அதிகாலை 6க்கு மேலாகி விடும். இந்த தெருவில் இருக்கும் வீடுகளை விட சிறியது தான், இங்கிருந்து 8 அல்லது 9 வீடுகள் தள்ளித்தான் இருக்கிறது அவள் கோவில்.  மீண்டும் ஒரு முறை அந்த நீலத்தில் நீந்த ஆசையாகவே இருந்தது.. அதிகாலை குளித்தெழுந்து கோவிலுக்குள் நுழைகையில்... நேற்று இரவு உலா வந்த சந்தான லட்சுமி தேரோடு கோவிலின் முகப்பில் நிறுத்தப்படிருந்தால். நேற்றிருந்த நகைகள், ஆபரணங்கள், குறிப்பாக அந்த ஜடை குஞ்சம்  எதுவும் இல்லை... கருநீல புடவையில் அப்பியிருந்த அந்த நீலமும் அவள் கையில் இருந்த பார்பியின் சிரிப்பும் இன்னும் பசுமையாய் இருந்தது. பூக்கள் மட்டும் தான் தங்களின் நிறத்தை வாடியது போல் மாற்றிக்கொண்டிருந்தன.

அந்த கோவிலின் பூசாரி அண்ணா பத்திர்க்கையாளர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

"அடி வெள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்... பக்தர்கள் குவிந்தனர்.." ன்னு ஆன்மீகம் பகுதியல போட்டுடலாமுங்க. ஏம்மா நீங்களும் அப்படி கூட்டத்தோட சேர்ந்தாப்பல நில்லுங்க" என்று ஏற்கனவே பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்து கூட்டி வந்திருந்த பெண்களோடு என்னையும் நிறுத்தினார், பத்திரிக்கை நிருபர்.

ஆடி வெள்ளி துவங்கியதிலிருந்தே ஒவ்வொறு வெள்ளியும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தான், ஒரு வாரம் தானியம், பழங்கள், காய் கறிகள், வளையல் என்று நீண்ட பட்டியலில் இன்று ஆடியின் கடைசியின் வெள்ளி. அம்மன் கருவரையில் அவளுக்கு இன்று "ரூபாய் நோட்டுகளில்" அலங்காரம் செய்திருதார் பூசாரி. நேற்று சந்தான லட்சுமி கழுத்தில் இருந்த அதே நகைகள்,  அதே ஜடை பில்லை, உச்சி கொண்டை. புகைப்படம் எடுத்து நிருபர் சென்ற பின், பெண்கள் வரிசையில் நின்றிருந்த வள்ளி அக்களிடம்

"சாய்ந்தரம் வரை ஒன்னு ரெண்டு பேர் கோவிலுக்கு வந்துக்கிட்டு தான் இருப்பாங்க.... இன்னக்கி பொழுது சாஞ்ச அப்புறமா நகைகளையெல்லாம் கழட்டி கொடுத்திடறேன். ரூபாய் தாள்கள் எல்லாம் மஞ்ச கயிறல கோர்த்திருக்கு... பக்குவமா எடுத்து தாரேன் நாளை வர பொருத்துக்குங்க. எல்லாரும் எதை எதையோ வேண்டி தான் அம்மாகிட்ட வாராங்க. அவளுக்காக உங்க கிட்ட நான் கேட்கிறேன் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க" என்று சொல்லி இன்னும் இரண்டு தொன்னை நிரம்ப பிரசாதம் அள்ளி வள்ளி அக்கா கையில் பூசாரியண்ணா கொடுக்கவும் சர்க்கரை பொங்கலோடு சேர்ந்தே வழிந்தது வள்ளி அக்காவின் முகம். அம்மனோடு சேர்த்து மற்ற அனைத்தையும்  தரிசித்த நிறைவோடும் தவிப்போடும் வெளியே வருகையில்,

சந்தான லட்சுமியின் பார்பி பொம்மையை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தாள் வள்ளியக்காளின் பேத்தி!!