Sunday, October 17, 2010

உலவிடுவான் கண்ணன்....!!





 முத்து மணி மாளிகையில்
கோபியர்கள் தேடுகையில்
குலவிடுவான்
என் கண்ணன்!

மோகனம் தெளிந்து
விழிமயிர் அவிழ்கையில்
சொப்பனம் என சொல்லி
சிரித்திடுவான்
என் கண்ணன்!

மார்கழியின் ஈரத்தை
விழியில் பரப்பி
கூதல்முன் முகில்நிறத்தை
தேகமெங்கும் நிரப்பி
கண்நிறைக்கும்
ஆழி என் கண்ணன்!

திரண்டு பொங்கும்
இளமதி முகங்கொண்டு
வளர்பிறை பொருந்திய
புன்னகை நெய்து
ஊனிக்க என்னுள்
உலவிடுவான் கண்ணன்!

ஆயர்பாடியில் ஆடித்திருந்தவன்
ஆகாயத்தில் பறந்துவிட்டான்.
மழைக்கு பின் சிதறியுடையும்
நீர் குழிழ் போலே
இந்த பேதையின் கனவையும்
உடைத்துவிட்டான்.

யமுனை கரையோரம்
யாழ்மீட்டி திரிகையில்
பரிசொன்று
தருவதாய் சொல்லி
சென்றான்.

யாட்கையை தொலைத்துவிட்டு
யாசகம் கேட்கையில்
பதிலை வேங்குழல்
துளையினில் புதைத்து
நின்றான்.

அவன் மீட்டிய
கானங்கள் - காயங்கள் ஆனதும்
உச்சி மயில்பீலி எடுத்து 
அசைந்து வந்தான் -
கனிந்த வடுக்களில்  குருதி
சொரிகையில் - மெல்ல
மெல்ல வருடித் தந்தான்.

என் விழிகளை கடக்கும்'
ஏக்க அலைகள்
கண்ணன் கால்களை
நனைத்தே கரை
திரும்பும்.

ராதையின் ரணங்களினி
ஆறுவதில்லை.
இருந்தும்
மதுசூதனன் மலர்முகம்
கண்டால் இமையடங்கும்.

Wednesday, September 22, 2010

ஆழிப்பெண்


மார்கழி பனிக் கோர்த்த மெத்தை என்று
என்னை இத்தனை நாளும் கொஞ்சி நின்றார்.
என்னுள் இருக்கும் முத்தெடுக்க நிதம்
கத்தும் கடலலை போல வந்தார்.

என் கைகள் விரித்து காத்திருந்தேன்.
என் உடல்நீர் சோற பூத்திருந்தேன்
நான் தேடிய மலரின் மகரந்தம்
என்று என் வாசல் வருமேன பார்த்திருந்தேன்.

இறந்தவர் துகள்தனை என்னில் கரைப்பதை போல்
என் கால சொப்பனம் கரைந்ததடி.
கதறிஎழும் கடலாய் இங்கு கொதிக்கின்றேன் - பாவி
என் கனவை மீட்டிட வழி சொல்லடி

அன்று என்னின் அழகு என் அலைகள் என்றோர்
இன்று கரிக்கும் நீரேன உமிழ்ந்து விட்டார்.
அதற்கு நன்றிகள் பல சொல்லி தேம்புகின்றேன்
எனக்கு ஆறுதல் சொல்வோர் யாரோடி!

அஞ்சனம் அழிய கதறுகையில் இங்கு
கங்கையும் கொஞ்சம் கசந்திடுவாள்
ஆழி நான் அலையாய் கொதிக்கையிலே
யார்தான் என்னில் கால் நனைப்பார்!

என் கரைக்கு வந்தோர் இன்புறவே
அழகாய் வாழ்ந்திட்ட வேசியும் நான்.
இனி எந்தநாளும் கடல் புக முடிய
என் கரையைக் கடந்திட்ட அலைதான் நீ!!

Thursday, May 6, 2010

கவிதைகள் - 2



மயிலிறகு

இயற்கையின் முரண்.

மழை காலத்தில்
தோகை விரித்தது

பெண் மயில்...


மயிலிறகின்
ஒவ்வொரு கீற்றிலும்

துளித் துளியாய்
சொட்டி கொண்டிருந்தது
அதன் காதல்!!!






பயணங்கள்


உன்னுடன் சினுங்கி
சுர
க்கும் அலைபேசியின்
ஒலியாய்....

உன்னுள்ளீரம் பரப்ப..
குடுவையில்
அடைப்பட்டிருக்கும்

மேகமாய்...


என் காதலின்

உயரம் நீ...

உன் அடையாளத்தை

சுருக்கிய

நீல அட்டையாய்...


உன்னுடன்
ஒட்டிகொண்டும்.

உய்த்துகொண்டும்

திரிகிறேன்

உன்னுடன் வர முடியாத
பயணங்களில்....!!!!




பனித்துளி

இன்று என் தோட்டத்து
அரளி செடியின்

பச்சயத்தை

மறைத்திருந்தது...


அதன் மீது
படர்ந்திருந்த

பனிதுளிகள்...










பொம்மை


சில மணித்துளி
பயணங்களில்

சர்கார் இடம்
என் இடம்
ஆகிப்போனது.


அடுத்த நொடி

கைமாறும்
கரென்சி காகிதங்கள்

இந்த நொடி

எந்தன் ஆஸ்தியாக

தெரிந்தது..


இன்று
மகளாக இருக்கும்

நான்

நாளை அம்மாவாகவும்
ஆக கூடும்.


வேறொரு வனத்தின்
உச்சந்தலையில்
உருவான மேகம்
காற்றின் அசைவில்

இன்று என் வாசலை
நனைத்ததில்

ஆச்சரியமும் இல்லை.


எத்தனை
முன் எச்சரிக்கைகள்.


இருந்தும்
பால் மணம் மாறாப்
பிள்ளை போல்
எனக்கு சொந்தமே
இல்லாத பொம்மையை
என் அக்குளில் தூக்கிச்
சுமக்கிறேன்
என்று பறிக்கப்படுமோ
என்ற அச்சத்தோடு...

Tuesday, April 27, 2010

பறவை

தீண்டல்கள் நேராத பெண்ணின் தேகம் போல் மென்மையான சதை. குட்டி பிள்ளைகள் நெற்றியில் பொட்டு என்ற பெயரில் வைக்கிற சின்ன புள்ளியை போன்ற கண்கள். கண்ணிர் துளிகளுக்கு வார்த்தைகளாக மாறும் வல்லமை உண்டு என்று அன்று தான் அறிந்திருந்தது அது. கழிவரைகளுக்கும் கைகுட்டைகளுக்கும் மட்டும் பரிச்சியமான கண்ணிர் துளிகளை வார்த்தைகளாகவும் உதிர்க்க முடியம் என்று அன்று தான் அதற்க்கு தெரிந்திருந்தது. அந்த பறவைக்கு அன்று ஒரு காதல் கடிதம் எழுதவேண்டும் என்று ஆசையாக இருந்தது . இந்த காதலை பார்ப்பவர்களும் கேட்பவர்களும் சிரிக்கலாம், முரைக்கலாம், ஏன் காரி கூட துப்பலாம் அப்படியொரு காதல் அந்த பறவைக்கு அந்த மரத்தின் மீது!!

பறத்தல் என்பது இயற்கையான நிகழ்வு. அது நிகழாவிட்டால் அதற்க்கு பறக்கவும் தெரியாது மற்ற பறவைகளை போல் பாடவும் தெரியாது ஆடவும் தெரியாது. என்றோ எப்படியோ நிகழ்ந்தது. கனமாக இருந்ததால் லேசாக அசைத்து பார்க்கலாம் என்று சிறகினை அசைத்ததில் இன்று அந்த மரத்தின் கிளையில் அமர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க பறவைகளின் பட்டியலில்இடமும் பெற்று இருந்தது. முதலில் எல்லாம் சாதாரணமாக தான் இருந்தது. காற்றில் இலை அசைவதும். மரத்தின் கிளைகள் இதற்க்கு இடம் கொடுத்தும். சில நாட்களுக்குள் இலையின் தீண்டலும் கிளையின் ஸ்பரிசமும் இயற்கையாக தெரிந்தது. பின்பு சுகமாக கடிதம் எழுத நினைத்த பொழுது சுமையாக.


அந்த மரம் வளர நீர் பாய்ச்சியவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. ஒரு சிலரை தவிர. வேர்கள் படர்த்தி கிளைகள் உயர்த்தி திமிர்ந்து நிற்கும் மரம். மரங்களில் கொழிக்கும் வளத்தினை மறைத்து வைக்க எந்த அந்தரங்க பாகங்களையும் இறைவன் வைக்கவில்லை. அதை மறைக்கும் எண்ணமும் மரங்களுக்கு இருப்பதில்லை. எத்தனையோ பறவைகளுக்கு அடைக்கலம் தந்த மரம். இந்த பறவைக்கு நிழல் கொடுத்ததில் ஆச்சிரியம் என்ன? ஆனால் தன்னில் வந்த அமர்ந்த எத்தனையோ பறவைகளின் இந்த பறவை மட்டும் சுமையாக இருந்திருக்க வேண்டும் அந்த மரத்திற்கு. சற்று கவனத்தோடு தான் தங்கி பிடித்து இருந்தது . பறவையின் கனத்திற்கு நிச்சயம் அதன் உடல் கரணம் அல்ல என்று மட்டும் அந்த மரத்திற்கு தெரியும். (எத்தனை பறவைகளை பார்த்திருக்கும் ).

அந்த பறவையின் சிறகுகள் துளிர்க்கையில் அடைக்கலம் தந்த மரம். அந்த பறவையின் திசைகளுக்கும் எல்லாம் வழிவிட்டு நகர்ந்துகொண்ட பெருந்தன்மையான மரம். இரைத்தேடி பறந்ததில் சோர்ந்திருந்த போது சுடும் சூரியனை காட்டி அவன் குளிர் தருவான் அவனை நோக்கி செல் என்று பாதை வகுத்து கொடுத்த போதி மரமும் இதுவே. பசித்த போது கனிகளை கொடுப்பது மரத்தின் பண்பு. கிளைகள் நீண்டிருந்தால் மற்ற பறவைகளும் வந்து அமர்வது அவற்றின் இயல்பு. இதில் என்ன தான் இந்த பறவைக்கு மட்டும் கோபமோ?? பொறமையோ?? இல்லை அதன் மொழியில் காதலோ??? அடைகலம் வந்த இடத்தில் மரத்தை உரிமை கொண்டாட நினைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதையும் அந்த பறவை உணர்ந்திருந்தது.

யார் தான் பொறுப்பு இந்த பொல்லாத காதலுக்கு. பறவைக்கு பறவையின் மீது காதல் வரலாம். அது என்ன மரத்தின் மீது. மரங்களில் கிளைகள் என்றால் நீண்டு தான் இருக்கும். அதை போய் ஏதோ தன்னை அழைபதற்காக தான் கரம் நீட்டி விரல் நெருடி நகம் இளைத்து அழைப்பதாக எண்ணி கொள்வதெல்லாம் முட்டாள்தனம். பறவைக்கு காதல் வந்தாலும் சரி கழுதைக்கு கத்திரிக்காய் வந்தாலும் சரி. அந்த பறவைக்கான இடம் அதற்காக மட்டுமே என்பதில் அந்த மரம் உறுதியாக இருந்தது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத செயல்களை நினைப்பதும் ஏங்குவதும் அதையே சாதகமாக்கி வெற்றி காண்பதும் பெண்தன்மை வாய்ந்த எல்லா உயிரினகளுக்கும் பொருந்தும். வேடந்தங்களுக்கு இந்த மரத்தை அழைத்து சென்று இது என் காதலன் என்று அந்த பறவையால் இந்த மரத்தை அறிமுகம் செய்ய முடியுமா? கம்பிரத்தின் பிரதிநிதிகள் மரங்கள். அதை தன்னை போல் பறக்க வேண்டும் என்று நினைப்பது தான் சாத்தியமாகுமா?


அன்று நல்ல மழை. அந்த மரத்தின் தண்டுகள் பழமையடைந்ததற்கான சுவடுகளே இல்லை. . அன்று அந்த மரத்தில் எந்த பறவைகளும் இல்லை. உயர்ந்து சிலிர்த்த மரத்தில் அந்த பறவை மட்டும் தனிமையில் இருந்தது அதற்க்கு பரவசம் அளிப்பதாய் இருந்தது. அந்த பறவை தனக்காக அந்த மரத்தில் ஏற்படுத்தி இருந்த பொந்தில் தன் இரு கால்களை குறுக்கி கதகதப்பை உணர்ந்திருந்தது. தனக்காக மட்டுமே ஆண்டவன் இந்த மரத்தை படைத்திருப்பதாக உணர்ந்தது. சில மணி துளிகளில் அந்த பறவையின் காதுகளுக்கு, சிதறும் மழைத்துளியின் நடுவே உடல் சிலாகிக்கிற அதன் மெலிய சிறகுகள் சில்லென்று சிலிர்க்கிற ஒரு வித்தியாசமான செல்ல ஒலி. தன் காதலனோடு தங்கிருந்த தனிமையை உடைத்தெறிந்து அது என்ன ஒலி என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் அந்த பறவைக்கு. அந்த ஒலியையின் பிறப்பிடத்தை தேட ஆயத்தம் ஆகியது. அந்த மரம் தனக்கு சொந்தம் என்ற மாயை ஒரு கனம் தளர்த்தியது. கண்களை கதகதப்பில் வைத்து கொண்டு பார்வையின் நீளத்தை மட்டும் நீட்டி பார்த்தது. தட தட வென்று பொழிகிற மழையின் இடையே... மழைக்கு ஒதுங்கிய ஒரு இளம் தாயின் மார்புகள் மூலமாய் அவள் குழந்தைக்கு அந்த ஒலி சுரந்து கொண்டு இருந்தது. இப்பொழுது அந்த பறவையும் நனைய துவங்கி இருந்தது. மரத்தின் வெளியே பெய்த மழையிலும் தனக்கு மட்டுமே சொந்தமான அதன் கண்ணீரிலும். அதற்க்கு காதல் கடிதம் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது!!!!!!!

Thursday, April 22, 2010

மழை

மகரந்த பூச்சு!!

அந்த மரங்களக்குள்
கொளுத்து எரியும்,
தீ பந்தத்தின் நிழல்
கவிழ்ந்திருந்தது.

நிழலின் திடமான வீச்சில்
இரண்டு
மரங்களும் சரிந்தே
விட்டன!

வீழ்ந்த மரங்கள்
விதைகளை
மண்ணில் விதைக்காமல்
நிலத்தில் உலர்தியிருந்தன.

நிழல் ஓய்ந்திருந்தது.
இப்பொழுது
நல்ல மழை .
அதில் ஒரு
மரத்தின் கிளை
மட்டும் சுளிரென
அள்ளி தெறித்தது
மகரந்த பூச்சை!

வெண்க்கடல்

கானம் மீட்டி
அடர்ந்து தடித்திருந்த
திடமான கரும்மிருட்டு.
என்னை அழைத்த அந்த
ஊதா நிற பறவைக்கு
நான் ஒரு கதை சொன்னேன்!

விந்தையான இயற்க்கை
ஊர் வெளியில் பாய் விரித்த இயற்கை
செங்கடலாக
கருங்கடலாக
நீலக்கடலாக
ஊர் எல்லையில் மட்டும்
வெண்க்கடலாக"

தொலைநோக்கு

அடுத்த சில மணிநேரங்கலில்
மழை வருவதற்க்கான
அறிகுறிகள் உண்டென்று
சொன்னாய்...
அருகில்
கொழுத்து கருத்து
இருந்த முகிலை
அறியாமலேயே!!

மழை

மகரந்த பூச்சு!!

அந்த மரங்களக்குள்
கொளுத்து எரியும்,
தீ பந்தத்தின் நிழல்
கவிழ்ந்திருந்தது.

நிழலின் திடமான வீச்சில்
இரண்டு
மரங்களும் சரிந்தே
விட்டன!

வீழ்ந்த மரங்கள்
விதைகளை
மண்ணில் விதைக்காமல்
நிலத்தில் உலர்தியிருந்தன.

நிழல் ஓய்ந்திருந்தது.
இப்பொழுது
நல்ல மழை .
அதில் ஒரு
மரத்தின் கிளை
மட்டும் சுளிரென
அள்ளி தெறித்தது
மகரந்த பூச்சை!

வெண்க்கடல்

கானம் மீட்டி
அடர்ந்து தடித்திருந்த
திடமான கரும்மிருட்டு.
என்னை அழைத்த அந்த
ஊதா நிற பறவைக்கு
நான் ஒரு கதை சொன்னேன்!

விந்தையான இயற்க்கை
ஊர் வெளியில் பாய் விரித்த இயற்கை
செங்கடலாக
கருங்கடலாக
நீலக்கடலாக
ஊர் எல்லையில் மட்டும்
வெண்க்கடலாக"

தொலைநோக்கு

அடுத்த சில மணிநேரங்கலில்
மழை வருவதற்க்கான
அறிகுறிகள் உண்டென்று
சொன்னாய்...
அருகில்
கொழுத்து கருத்து
இருந்த முகிலை
அறியாமலேயே!!

Saturday, April 10, 2010

காற்றாடி

அன்று என் மனம் அதிகாலையிலே எழுந்து விட்டது. இன்னும் என் கண்கள் விழித்து கொள்ள சில மணி நேரம் பிடிக்கும். எவர் சில்வர் பாத்திரங்களின் சத்தமும், சமையலறை நீர் குழாயில் சொட்டி கொண்டிருக்கும் நீர் துளிகளும் என் அம்மா எழுந்து விட்டதை உணர்த்தியது. முழுமையாக விழித்த மனத்துடன், கண்கள் மட்டும் மூடி கிடப்பது, நம் மனதுக்கு பிடித்த காதலியுடன் தனி அறையில் இருப்பது போன்ற சுகம். கண்களில் துவங்கி உயிர் சுரக்கும் அணு வரையில் நிரம்பி வழியும் அந்த இருள் தான் நம் கற்பனைகள் எல்லாம் கை கால் முளைத்து ஆட்டம் போடும் அழகிய மேடை . அன்று என் கற்பனை மேடையில், என் வருங்கால கணவர் என் கால் விரல்களில் சொடுக்கு எடுத்து மென்மையாக என் பாதங்களை வருடி கொண்டுஇருந்தார் என் மனதில் அவரையும் என் உடலில் அவர் உயிரையும் சுமக்கும் பெருமிதத்தில்.

அப்பொழுது, என் தலையின் மேல் கவிழ்ந்து இறங்கி கொண்டிருந்த துருபிடித்த மின் விசிறியின் காற்று என் கற்பனை ஆட்டதிற்கு மேலும் வலு சேர்த்து கொண்டிருந்தது. காட்டருவி போல் நல்ல சத்தத்துடன் குளுமையான காற்றை பொழிந்து கொண்டிருந்தது அந்த காற்றாடி. இருபத்தி நான்கு ஆண்டுகள் பழமை வாய்ந்த காற்றாடி. என் பெற்றோர் திருமணத்திற்கு சீதனமாக வந்த காற்றாடி. பழுப்பு நிற காற்றாடி, வண்ணம் அடிக்காமலேயே காபி நிறத்தில் மாறியிருந்தது. முதல் நாள் பள்ளி செல்ல மறுக்கும் பிள்ளையின் கைகளை அம்மா இழுக்கிற போத விம்மி விம்மி கதறுகிற குழந்தையின் முனுகல் போன்றது அதன் டர்.. டர்.. என்ற ஒவ்வொரு சுழற்சிக்குமான சத்தம். என் சிறு வயதில் கேரளா கோயில்களில் நான்கு கைகளை விரித்து என்னை பயத்திலும் பக்தியிலும் ஆழ்த்திய உக்கிரமான லட்சனமான காளியின் அம்சம் அந்த காற்றாடி. அது இயங்குவதற்காக மின்சாரம் பாய்ச்சப்பட்ட அடுத்த நொடியே காளிக்கு உயிர் வந்ததை போல் தன் கைகளை மெல்ல சுழற்றி அட ஆரம்பிப்பாள். ரேகுலேடரின் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு ஆட்டம் தான்.


எண் ஒன்று, இப்பொழுது அம்பிகை சாந்த சொருபினி நாட்டியம் பழகும் பெண் போல மெல்ல அபிநயம் பிடிப்பாள். மதிய வெயிலில் தேகத்தில் மலர்ந்திருக்கும் வியர்வைகளை கொய்வதற்கு இந்த காற்று போதுமானது. எண் இரண்டு, பரதம் பயின்ற இளம் பெண்ணின் முதல் அரங்கேற்றம் போல... காற்று வருகிறதோ இல்லையோ ஆட்டத்திற்கு குறையில்லை. வீட்டிக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் விதமாய் "வாங்க வாங்க உக்காருங்க ஏய் அந்த பேன் போடு... என்ற அசடு வழியும் வாசகத்துடன் காற்றாடியை இரண்டாம் எண்ணில் வைத்தால் தான் விருந்தோம்பல் பண்பிற்கு உயிர் சேர்த்த மிதப்பு. எண் மூன்று, இது நாட்டிய பள்ளியில் சற்று உடல் தடித்த 35 வயது மதிக்க தக்க நடனஆசிரியர் பயிற்றுவிக்கும் ஆட்டம் போன்றது. இந்த ஆட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது காற்றாடியின் மைய பகுதி. தஞ்சாவூர் பொம்மைகள் செய்ய நன்கு பிசைந்து உருண்டை கட்டிய மண்ணில் பொம்மையின் தலையையும் இடையையும் மாத்திரம் மசித்து உருட்டியது போல் தடக்.. தடக்.... என்று என்ன ஒய்யாரமான ஆட்டம். அனைத்தையும் துறந்த துறவி போல், துளிர்த்து கிளம்பும் வியர்வைகள் எல்லாம் அதன் துவக்கத்திலேயே நீராவியாகி கரிந்து போகும் மெல்லிய சுகம் மூன்றாம் எண்ணில் நம் வியர்வை துவாரங்கள் அனைத்தும் மோட்சம் கொள்ளும். இதற்க்கு மேலும் சில எண்கள் ரேகுலடோரில் இருந்த போதும். ஏனோ அவை இயங்குவது இல்லை.

இப்பொழுது என்னால் ஓரளவு கண்களை திறக்க முயற்சிக்க முடிகிறது. இமைகள் ஒட்டிய திரை கிழித்து வெளிச்சம் உள்ளே புகும் முன் மீண்டும் அவை ஒட்டிக்கொண்டு விடுகின்றன ம்ம் இன்னும் என் புற கண்கள் புலர நாற்பது நிமிடங்கள் ஆவது பிடிக்கும். இது தான் கற்பனை களியாட்டம் போடும் நேரம். இன்னும் அந்த குளுமையான தழுவலை உணர்கிறேன். மனித இனத்தை தவிர மற்ற அணைத்து உயிர் உள்ளவைகளும்.. உயிர் அற்றவைகளும்.. அதன் செயலை எதற்காகவும் யாருக்காகவும் நிறுத்தி கொள்வதில்லை. நாம் கடந்து செல்லும் ஒவ்வொன்றும் இல்லை நம்மை கடந்து செல்லும் ஒவ்வொன்றும் மனித இனத்துக்கான ஏதோ ஒரு செய்தியை தாங்கி கொண்டு வருகின்றன. காற்றாடிகளின் சேவையும் அது போல் தான்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன். பொதுவாக பசியை தாங்கும் வல்லமை என்னிடம் இல்லை. அன்று என் குடல் சுருங்கி விரியும் சத்தத்தை என்னால் நன்றாகவே கேட்க முடிந்தது. ஏதோ ஒரு அமிலம் என்னுள் குடம் குடமாக சுரந்து கொண்டு இருந்தது. அப்பொழுது என்னை கடந்து சென்ற மரங்களும் செடிகளும் அவியலாகவும், பொறியலாகவுமே தெரிந்தன. என்னை உரசிய தென்றல் திரவ வடிவில் இருந்திருந்தால் அப்படியே உறிஞ்சியேனும் குடித்திருக்கலாம். திருமணமான புதிதில் மனைவியை தேடும் கணவனை போல் அடுப்பறை பாத்திரத்தில் எனக்கான உணவை மூர்கமாக தேட முனைந்தேன். அந்தோ பரிதாபம்! தீ மிதித்து இறங்கிய இளம் பெண்ணின் பாதம் போல் அணைத்து உணவுகளும் மிக சூடாக பரிமாறப்பட்டன. என் பசி ஆரவேண்டுமாகின் முதலில் அந்த உணவு ஆறவேண்டும். மெல்ல ஏன் தலையை உயர்த்தி பார்த்தேன், நேற்று இரவு முழுவதும் உழைத்து களைத்த போதும் அதை அணைக்க மறந்த இந்த இரக்கமில்லா கருங்காலிக்கு தன் ஒப்பற்ற சேவையை புன்னகையுடன் ஆற்றி கொண்டு இருந்தது அந்த காற்றாடி.

நான் பிறக்கும் முன்னே இந்த உத்திரத்தில் வௌவால் போல் தொங்கி கொண்டு, இன்று எனக்கும் சாமரம் வீசியபடி இருக்கும் இந்த காற்றாடி எத்தனை பார்த்திருக்கும். ஆனால் நிச்சயம் எதையும் சுவரசியமாக பார்த்திருக்காது. வேண்டுமானால், வந்த புதிதில் ஏதோ ஒன்று இரண்டு பார்த்திருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் இதன் நண்பர்களும் உறவினர்களும் இன்று எந்த உத்திரத்தில் தொங்கியபடி எதனை விவகாரங்களை பார்த்துகொண்டு இருகிறார்களோ? நாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து பல கிசு கிசு களையும், ரகசியங்களையும் பரிமாறி கொள்வது போல் இவைகளும் சந்தித்து கொண்டால் அடேயப்பா!!!

இந்த காற்றாடி இதற்கு முன் பிறவியில் என் நண்பனாகவோ இல்லை நான் விரும்பி படிக்கும் புத்தகத்தின் எழுதுக்கலாகவோ இருந்திருக்க கூடும். இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு, நான் அற்ற வேண்டிய செயல்களை கடமைகளை யாருக்காக நிறுத்தி வைத்தேனோ அவர்கள் என்னை புறக்கணித்து அவர் கடமைகளை செயல்களை செய்கிற போது. என்னை போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது என்று வருந்தி இருக்கிறேன். ஒரு நண்பனை போல் அந்த வருத்தத்தையும் என்னிடம் இருந்த போக்கிய அதிசயம் இந்த காற்றாடி. தான் இன்றோடு நிராகரிக்க பட இருக்கிறோம் என்பதை தெரியாமல் எனக்கும், என் அரை சுவற்றில் கூடுதல் செங்கலாய் ஒட்டி கொண்டு இணைப்புக்காக காத்திருக்கும் அந்த குளிர்சாதன பெட்டிக்கும் தன் உண்மையான சேவையை ஆற்றி கொண்டு இருந்தது. ஏனோ இப்பொழுது என்னை தீண்டிய அந்த காற்றில் குளுமையுடன் சேர்ந்து உப்பு கரிப்பின் பிசு பிசுப்பும் வந்து ஒட்டி கொண்டது. இப்பொழுது மனமும் கண்களும் நன்றாகவே விழித்து கொண்டது இனி என்னால் உறங்க முடியாது.....!!!!

Wednesday, March 24, 2010

அழைத்தது யாரோ நீ தானே!!!!!

வார்த்தைகள். இவற்றிற்கு உயிர் உண்டு. சில சமையம் பிறந்த இடம் தெரியாமல் அதன் பிறப்பு பற்றியும் கவலைபடாமல் அது மறைந்து போவது உண்டு. காற்றில் இவற்றிற்கு என்று ஒரு தனி இருக்க கூடும். மிக ரகசியமான இடங்கள் அவை. வாயில் இருந்து உதிர்கிற வரை நம் கட்டுப்பாட்டிலும் பின்பு அந்த வார்த்தைகளே நம்மை கட்டுப்பாடு அற்றவனாகவும் மாற்றிவிடுகிறது.

நான் நமது நம்பிக்கை மாத இதழில் பணியாற்றி வருகிறேன். அன்று அந்த இதழின் ஆசிரியர் முத்தையா அவர்களை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வேலை, என் வாழ்நாளின் எந்த நொடிக்காக காத்திருந்தேனோ அந்த நொடியினை வார்த்தைகளாக வடிவமைக்கும் இயந்திரமாக அன்று முத்தையா மாறியிருந்தார். எப்பொழுதும் கண்ணதாசணனின் படைப்புகளையும் மற்ற கவிஞர்களின் வரிகளையும் தன் உடல் உறுப்புக்களில் ஒன்றாகவே கொண்டு இயங்கி வரும் மனிதர். அன்று அதே போல் எத்தனையோ வார்த்தைகளையும் கவிதை வரிகளையும் கொட்டி கவிழ்த்து கொண்டு இருந்தார். அந்த வார்த்தைகள் எல்லாம் என் காது துவாரத்தில் பயணம் மட்டுமே செய்தன. எந்த வார்த்தைகளும் அதன் பரிபூரண இலக்கை அடையவில்லை.

உருண்டோடிய எத்தனையோ வார்த்தைகளில். சில வார்த்தைகள் மட்டும் என் காது வழி நெடுஞ்சாலையை கடக்கவே இல்லை. என் மானுட உடலை வேறொரு வெளிக்கு கொண்டு செல்ல அந்த வார்த்தைகள் என்னை உந்தி தள்ளி கொண்டிருந்தது. மிகவும் வலித்தது. " வலி" என்கிற சொல்லாடல் தவறாகத்தான் இருக்ககூடும். நம் மனம் ஏங்கி தவித்த ஒரு பொருளை கண் முன் காணும் போது அதை அடைவதை போலவும் அதனோடு கரைவதை போலவும் ஒரு கானல் நீர் போன்ற ஆனந்தம் எழும். அந்த ஆனந்தம் நிச்சயம் மரண வலியை ஏற்படுத்த கூடியவை தான். அந்த கனம் அந்த வலியை( ஆனந்தத்தை) ஏன் உணர்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த திரை மெதுவாக விலக ஆரம்பித்தது. முத்தையா அவர்களிடம் இருந்து புறப்பட்ட எத்தனையோ வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகள் மட்டும் என் உடலில் உள்நோக்கி கட்டமைக்கப்பட்ட அணுக்கள் நிறைந்த சாலைகளில் நின்று கொண்டும் குவிந்து கொண்டும் அந்த வலியை எனக்கு ஏற்படுத்தி கொண்டு இருந்தது.

அவர் சொன்னது வெறும் வார்த்தைகளோ கவிதைகளோ அல்ல. அவை பல கவிதைகளின் கரு. அவர் சொன்ன வார்த்தைகள் இலக்கணங்களுக்கு உட்பட்டவை அல்ல. ஆனால் அந்த வார்த்தைகளின் பின் ஓங்கி நிற்கும் உன்னத ஒலிக்கு தெய்வீக காவியம் ஒன்று உண்டு. என் பிறவிபயனை கை தவறி உடைக்கும் கண்ணாடி பொருளை போல் சட்டென்று சொல்லிவிட்டார். " இன்னிக்கு சற்குரு 6 : 15 க்கு தீர்த்த குண்டத்தில் தரிசனம் தருகிறார்" என்னை பொறுத்த வரையில் காலங்களுக்கு என்று எந்த வரைமுறையும் கிடையாது. அது எவராலும் கடக்க முடியாத அல்லது வசிக்க முடியாத ஒரு பிரமாண்டமான காலி நிலபரப்பு. அதற்க்கு நொடிகள், நிமிடங்கள், நாட்கள், வாரம், மாதம், ஆண்டு என்று பல தேவையற்ற அறைகளை இந்த உலகம் எழுப்பி இருந்தது. அந்த காலி நிலத்தில் வெறுமனே நடந்து கடந்த தூரங்களுக்கும் இனி கடக்க விருக்கும் அருகாமைக்கும் இடையே முத்தையா அவர்கள் சொன்ன வார்த்தைகள் ரத்தம் பாய்ச்சின.

வலியை கடந்து என்னால் எப்படி இயல்பாக பேசமுடிந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாளை எனக்கு விடுப்பு வேண்டும் என்றேன் பள்ளி குழந்தைகளுக்கே உரிய பவ்வியதொடு. அவர் ஆசிரியர் என்ற மிடுக்கோடு பதலளிக்க வில்லை அதில் ஆச்சிரியமும் இல்லை. இதே வலியை பல வருடங்களுக்கு முன் உணர்ந்த சக நோயாளி என்ற முறையில் உனக்கு இன்றே விடுப்பு என்றார். நான் சற்குருவை அப்போதே தரிசிக்க துவங்கி இருந்தேன். இந்த உடலை மட்டும் அவர் அருகே நகர்த்துவதற்கு தேவையான வாகன ஏற்பாட்டை தனிச்சியாக செய்து கிளம்ப அயத்தமனது என் உடல்.

ஓவிய போட்டிகளில் பங்கேற்கும் போது தான் பசுமைக்கு பச்சை, வானத்திற்கு நீலம் என்று வண்ணங்களின் இயல்புகள் மூளையால் நினைவுகூர படுகின்றன. அன்று மட்டும் விசித்திரமாக என் உடல் கடந்து சென்ற பாதையின் இரு புறமும் இருந்த வண்ணங்களை என் கண்கள் உறிஞ்சியபடி சென்று கொண்டு இருந்தது. தியான லிங்கத்தை அடைந்த போது மணி 4 : 30 . அந்த இடத்தின் அமைதியும் அழகும் பல கவிதைகளில் பாடு பொருளாக அரங்கேறி இருந்தது. உள்ளே நுழையும் போதே நீங்க இஷாவிற்கு முதல் முறையாக வருகிறீர்கள என்று உலகின் அத்தனை பணிவையும் குத்தகைக்கு எடுத்த நண்பர் என்னிடம் கேட்டார். எங்கோ நீண்டிருந்த என் கிளை இன்று தான் விதை விதைத்தவனை காண அழைக்க பட்டிருக்கிறது என்று எப்படி அவரிடம் சொல்வது. நம் வீட்டு விசேஷங்களில் நம்மையே வரவேற்கும் முகம் தெரியாத தூரத்து உறவினர் போல் தான் அவர் எனக்கு தோன்றினர். இங்கே முன்பே வந்ததுண்டு என்று கூறி அவர் போல் இயல்பாக இல்லாவிட்டாலும் அந்த இடத்திற்கு அது தேவை என்று புன்கையை வரவழைத்து அங்கிருந்து நகர்ந்தேன்.

அங்கு நடக்கும் பாதையில் இருந்த கடுகளவு கற்களும், துளியளவு மண் மூட்டைகளும். உயிரில் தகித்திருந்த வலியை மேலும் எழும்ப செய்தது. தீர்த்த குண்டத்தை அடைந்த போது அண்களும் பெண்களும் தீர்த்த குண்டத்தில் குளித்து விட்டு வந்து சற்குருவை தரிசனம் செய்யும் அளவு நேரம் இருந்தது ஆனால் மனம் இல்லை. மனித புத்தியை கழுவி இஷாவில் வைத்த கதை தான். அது இன்னும் தர்கத்திலேயே குளித்து கொண்டு இருந்தது. உயிரில் உன்னத வலியையும் சுமந்து கொண்டு எங்கு குளித்து விட்டு வந்தால் முன்னால் இடம் கிடைக்காதோ என்ற அற்ப சிந்தனையையும் சுமக்க இந்த உயிரினத்தால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ. முன்னால் இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன் என்னை சுற்றி முன்று வயது குழந்தையின் கால் கொலுசு விழுந்து சிதறியதை போல் ஒரு சிலர் மட்டுமே அமர்ந்து இருந்தனர். அங்கிருந்தோர் அவர் அவர்களுக்கு தெரிந்த முறைகளில் கனமான ஓடுகளை சுமக்கும் உயிராக அமர்ந்திருந்தனர்.

சிலர் பரவசத்தில் அவர்களை இழந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த பொழுது குருவின் மீதான தேடல் எனக்கு குறைவோ என்ற தாழ்மை உணர்ச்சி என்னை பிடுங்கி கொண்டு இருந்தது. அங்கு திரை படம் பார்க்கும் சிறுமி போல் ஒவ்வொரு முகமாக எதையோ தேடி கொண்டு இருந்தேன். ஆனால் மனதில் மட்டும் ஒரு உறதி. எந்த காரணத்தை கொண்டும் கண்களை மட்டும் முடுவதாக இல்லை. கண் மூடி சூரியனை தரிசிக்க என் உயிர் இன்னும் பக்குவ படவில்லை. அன்று மட்டும் கருப்பும் வெள்ளையும் புணர்ந்து ஒரு தெய்வீக நிறத்தை வானம் கொண்டிருந்தது. இப்பொழுது மணி 5 : 45 பலாபலத்தை சுற்றும் உயிரினங்கள் போல் மக்கள் அமர்ந்திருந்தனர். தீர்த்த குண்டம் ஒரு சில நேரங்களில் சத்சங்கத்திற்கு தேவையான உடையை அணிந்திருந்தது. இப்போது என் உயிர் கூடை பந்தாட்ட காரனின் கைகளுக்கும் தரைக்கும் இடையே மாட்டிய பந்து போல் எம்பி எம்பி குதித்து கொண்டு இருந்தது.

இப்பொழுது மணி 6 : 15 . ஆம் அதே தான். உயிர் உடைந்து விட தருணம். இஷா சுவாமிகள் மிக நேர்த்தியாக அமர்ந்து அகிலத்தின் ஆனந்தத்தை வரவேற்க தயார் ஆகிக்கொண்டு இருந்தார்கள். உடுக்கைகள் மெதுவாக உள்ளத்தில் இறங்க ஆரம்பித்திருந்தது " நா பாப்பம் நா புண்ணியம் சிவோகம் சிவோகம் !!! நா சௌக்கியம் நா தூக்கம் சிவோகம் சிவோகம்!!! ஐம்புலன்களும் அதன் செயலை இழந்து இருந்தது உயிரை தவிர. எங்கோ அண்டத்தின் அத்தனை கணமும் ஆறடியில் மெதுவாக மிக மெதுவாக எதற்கு இத்தனை நிதானம்........!!!! நெருங்க நெருங்க ஆறடியின் பிரமாண்டம் எனக்குள் இறங்க துவங்கி இருந்தது. அனைவரும் அவர் அவர் உடலை கடந்து இருந்தனர் என்பது என் நாவில் லேசாக பின்பு பயங்கரமாக உணர்ந்த துவர்பால் உணர முடிந்தது. அதற்க்கு கண்ணீர் என்பது சரியான வார்த்தை அல்ல. காரணம் அன்று அது ஆணை உடைந்த வெள்ளமாய் பொங்கி கொண்டு இருந்தது கண்கள் முட வில்லை என்பதும் உரைத்தது. என்னால் அந்த கனலை தாங்க முடியவில்லை நுரை குழுமிய வெள்ளிகீற்றுகள் மார்பில் உரச கண்கள் பாதி திறந்து அவன் கைகள் சொடுக்குகையில் ஐயோ!!!!!! உயிரின் ஆணி வேறை கிள்ளி என்னை உடலில் இருந்து முழுவதுவமாக உருவி எடுத்து அந்த கால் தண்டையில் வைத்து விடலாம் போல் இருந்தது. சுவாமிகள் இசைத்த பாடலுக்கு கால்கட்டை விரலை மட்டும் நிலத்தில் தடவி தடவி தாளம் போட்ட அந்த இடைவெளியில் நான் மாட்டியிருக்க கூடாதா???? அந்த கண்களில் வழியும் ரசமும் என் கண்களின் தகிப்பும் ஒரு முறை நேர் கோட்டில் நின்று அந்த புள்ளியில் என் கர்மங்கள் அனைத்தும் வெடித்து சிதறியிருக்க கூடும். எனக்குள் பொரிந்த நெருப்பு துகள்கள் அதை உறுதி செய்தன.

என் தொப்புள் கொடிகளை யாரோ பிடித்து இழுப்பது போல் உணர்ந்த பொழுதில் அந்த மாயா குரல் என்னை தழுவ துவங்கி இருந்தது. அந்த குரலின் பிறப்பிடம் தானே நம் அனைவரின் தேடல் அதை தானே நானும் தேடி பயணப்பட்டு கொண்டு இருந்தேன். பயணம் முடிந்து அந்த பிறப்பிடம் கண்டிருந்தால் இந்த கட்டுரை எழுத நான் எங்கே???? அந்த குரல் என் ஊயிரை மத்து போல் கடைந்து கொண்டு இருந்தது மீண்டும் அதே துவர்ப்பு நாவில் திகட்ட துவங்கியிருந்தது. கண் இமைகள் என் உள்ளே அமுங்கி இருந்தன அந்த தரிசனத்தை கண் இமைகள் உள் வாங்கி என் அணைத்து பாகங்களுக்கும் அனுப்பி கொண்டு இருந்திருந்தது. இபொழுது கண்ணீரில் துவர்ப்பு வோய்ந்து குளுமை நிரம்பி என் மடியில் சொட்டி கொண்டு இருந்தது. மீண்டும் தீர்த்த குண்டம் அதன் பழைய உடையை அணிந்திருந்தது.

சற்குருவின் விரல் வலி அருள் கசிந்து இறங்கிய அந்த திரு நீரை அணிகையில் என் சகல வினைகளும் களை எடுக்க பட்டு புனிதம் அடைந்ததாக உணர்ந்து .... மீண்டும் அந்த அழைப்புக்காக காத்திருக்கிறேன்.....!!! அழைத்தது யாரோ நீ தானே!!!!!
--

Tuesday, February 16, 2010

தூரம்

அன்று இரவு எழு மணியிருக்கும். இன்னும் முழுவதுமாக இருட்டவில்லை. L.K.G குழந்தை டிராயிங் காம்பிடிஸனில் இயற்க்கையை வரைந்தது போல் இருந்தது. வெளரி போன வானம். ஒரு ரூபாய் நாணயம் வைத்து வரைந்தது போல வட்ட நிலா. கோணலான மரம். நம்மூர் நகரங்களை போல் மரங்களுக்கு கலர் கலர் வண்ணம் அடித்து 4கி.மி 5 கி.மி என்று தொலைவினை குறிக்கும் பழக்கம் அந்த நகரத்துக்கு, ஏன் அந்த நாட்டுக்கே இல்லை. அடுத்த அரைமணி நேரத்தில் திருமணம் ஆகபோகும் இந்திய மணப்பெண் போல் மிக நேர்த்தியுடன் அந்த நாட்டு மரங்களை அலங்காரம் செய்திருந்தார்கள். அதில் சில முதிர் மரங்களும் அடங்கும்.

வெரிச்சோடி போன வீதிகள். பல மைல்கள் தள்ளி சாலையோரத்தில் தென்னைஓலை குடிசையில் குதித்து விளையாடுகிற தவளை போல், தூண்டில் விளக்குகளில் துள்ளி குதிக்கிற துளி வெளிச்சம். கோடிகணக்கான யானைகளை கவிழ்த்து போட்டது போல் கருமையான இருட்டு என்று இரவுக்கே உரித்தான எந்த வரைமுரையும் அந்த நாட்டுக்கு இல்லை. இரவு வரும் நேரத்தில் இவர்கள் உறங்குவதில்லை. இவர்கள் உறங்கும் நேரத்தை இரவென்று கொள்ளலாம். காதலை சுவைக்கிற நள்ளிரவில் ரெஸ்ட்ரான்களில் உணவை சுவைக்கிற வேடிக்கையான மனிதர்கள்.

நடு ரோட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காட்டிலும்.. அந்த நாடேங்கும் ஓங்கி வளர்ந்திருக்கும் கட்டிடங்களுக்கு கம்பீரம் அதிகம்.மனிதர்கள் ஆடை அணிவதை எத்தனை முக்கியமானதாக கருதுகிறார்களோ... அதே முக்கியத்துவத்தை உதடுகளில் அணிகிற புன்னகைக்கும் கொடுப்பது இந்நாட்டு மக்களின் சிறப்பு. புன்னைகையில்லாத நிர்வாண முகங்களை இந்நாட்டில் காணமுடிவதில்லை. பல வருடங்கள் பார்த்து பழகி உய்த்து போன உறவினர்களை காண்பது போல் கனிவான பார்வை. கிழக்கு ஆசிய நாடு. நம் நாட்டு கேரள மணம். மலேசியா என்று பெயர். நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் சரியான பொருத்தம் தான்.

அந்நகரின் மையபகுதியில் இரண்டு பெண்கள் பிரசவ வலியில் துடிக்க, அந்த இரண்டு பெண்களுக்கும் பிரசவம் பார்த்தது ஒரே மருத்துவர் தான். இரண்டு குழந்தைகளுக்கும் இடையே நெருக்கமான ஒரு தொலைவு. முதல் குழந்தை: கண்ணில் கூர்மை. தன் உதடுகளை ஒரு புறமாய் இழுத்து சிரிக்கையில் ஆண்மகனுக்கே உரிய கர்வமும் கம்பிரமும் கவ்வியிருந்தது. அடுத்தது பேரழகி.
வாழையிலை வடிவில் ரோஜா இதழ் கையில் மிதப்பது போல் ஒருணர்வு அந்த பெண் குழந்தையை கையில் ஏந்துவோர்க்கு. இந்த இருவருக்கும் இடையில் பரிணாமத்தில் முழுவதுமாக வளர்ச்சியடைந்த ஒரு ஆண் கால் நீட்டி படுக்கும் அளவு தூரம்.

இந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையே மழலையின் குறும்பு.. இளமையின் கொதிப்பு என எத்தனையோ பருவங்கள் மாறின. இன்று இவர்கள் காதலர்கள். ஆனால் இவர்களின் நடுவே இருந்த தூரம் மட்டும் ஆக்ஸிஜன் நிரப்பப்பாடாத இதயமாகவே துடித்திருந்தது. "தூரம்". இந்த வார்த்தையின் பக்கவிளைவே அதை அடையமுடியாத தவிப்பு தான். இவர்களுக்கும் அந்த தவிப்பு கடும் கனலாய் தகித்திருந்தது. ஆனால் பாலாய்போன உலகம் அவர்களை சேர்த்தே பார்த்தது.

கண்ணாடி கரையோரம் கால் வீசி திரியும் வண்ண கந்தர்வானாய் அவன் நிமிர்நிதிருக்க. அவன் அருகே பனிமலை குடைந்து பார்வையின் நீளம் கடைந்து. பளீரென சிரிக்கும் பூப்படைந்த பெண் வசிகரமாய் வளர்ந்திருந்தாள். காதலர்களின் உற்ற நண்பன் தனிமை. அய்யோ பாவம் இவர்களிக்கு மட்டும் அது வாய்க்கவேயில்லை.

மங்கையவள் நெற்றியில் சரிந்தொடும் பூங்குழலை மன்னன் இவனுக்கு ஒதுக்கத்தான் ஆசையிராதோ? காண்டீபம் உயர்த்தி கண்ணின் கருமணியை ஓராமாய் நகர்த்தி தையலவள் கூர்ந்து பார்க்கையில் காளையாம் இவனுக்கு கண்மணியை மடியில் சாய்த்து கம்பன் வரிகள் பாட ஆசையெழாதோ?? இவர்களிடையே ஏன் இந்த தூரம்? சேர்ந்தே பிறந்த இவர்கள் சேராமல் போனது விதி.

ஆனால் இந்த காதலர்கள் விலகியிருந்து காதலில் துடிப்பதை காண்பது அத்தனை அழகு. கொஞ்சம் மனிததன்மையற்ற நிலை தான். இருப்பின் அந்த அழகினை காண்கையில்...... அரைகை அன்னமாக இருந்தால் அள்ளி தின்றிருக்கலாம். என் மனம் மசித்த காதலனாக இருந்திருந்தால் என் மார்புக்கும் அவன் முதுகுக்கும் மானசீக பாலம் அமைத்திருக்கலாம். நங்கை நான் சூடுகின்ற மலராக இருப்பின் நாசி கருக நுகர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. என் கையாலாகத தனத்தால் அழகை ரசிக்க மட்டுமே முடிந்தது.

பகலில் தான் இந்த நிலை இரவில் அனைவரும் உறங்கியபின் இவர்கள் தனிமையில் சந்திக்க வாய்ப்புள்ளதோ என்று சிந்தித்தால் இந்த ஊருக்கு பகலேது இரவேது கடிகாரத்திற்க்கு மட்டும் தான் அந்த பாகுபாடு இங்கு வாழும் மக்களுக்கு இல்லை.

இவர்கள் அழகை ஆராதிக்க அங்கே எழுப்பபடுகிற கட்டிடங்களுக்கு அஸ்த்திவாரம் அமைக்கும் கவனத்துடன் நீர் குமிழ்கவிழ்த்த ஜன்னல்களும் உருவாக்கப்பட்டு விடுகின்றன. அந்த ஜன்னலின் திரைசீலையை விலக்கி அந்த காதலர்களின் அந்தரங்கத்தை காண்பதில் கொள்ளை ஆனந்தம். அருகில் இருந்தும் தொலைந்து போன இந்த காதலர்களை காண உலகின் அனைத்து காதலர்களும் கைகோர்த்து வந்து கண்ணீர் மல்கி நிர்க்கும் அந்த இருவர் முன் புன்னகைத்து படம் எடுப்பது தான் கொடுமை.

உலக காதலர்கள் மட்டுமல்ல அந்த காதலர்களின் தனிமையை கெடுத்த பாவபட்டியலில் தமிழக எழுத்தாளர்களும் அடங்குவர். குற்றம் புரிந்த உணர்வு சூடுவதர்க்குள் இவர்கள் பொல்லாத கவிமனம் களியாட்டம் போடுகிறது. காதலியை தீண்டமுடியாமல் வக்கத்து நிர்க்கும் காதலனும்.. பெண்மை கரையாமல் கலங்கி நிற்க்கும் அந்த காதலியும் இவர்கள் கண்ணுக்கு உரித்த மக்காசோளம் போல் தோன்றினார்களாம்.



இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்? ட்வின் டவர் என்று செல்லாமாக (அய்யோ பாவம்) அழைக்கப்பட்டு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் மிளிர்ந்து கிடக்கும் இவர்களை வெறும் கட்டிடம் என்று சொல்ல.. என்னவனை மனமருகில் வைத்து தொலைத்து தொலைத்து காதலிக்கும் என் கண்களுக்கு மனம் வரவில்லை அவர்களை காதலர்களாகவே பார்க்க தோன்றியது. அண்டை நாட்டு காலச்சாரத்தை அறிந்து கொள்ளும் சாக்கில் பத்திரிக்கையாளர் என்ற முறையில் சென்றிருந்த போது. இந்த ட்வின் டவருடன் நடத்திய மானசீக பேட்டியிது...

நூற்றுக்கணக்கான துவாரங்களை கொண்ட "ட்வின் டவர்" காதலர்களின் உள்ளே நுழைந்த காற்று என்னையும் தீண்டி சென்றது கீழ்கண்ட வரிகளுடம்

" கோடி கணக்கான மின்னல்கள் ஒரு சேர பாய்வதை போல் நாங்கள் மின்னிகிடப்பதை அழகென்று ரசிக்கிறார்கள்..! தள்ளியிருக்கும் என்னவளை ஒற்றை விரல் நீட்டி தீண்டும் அந்த ஊசி முனை நிமிடங்களில் எங்களில் எழும் பரவசமே இந்நகர் முழுதும் பொங்கி வழியும் அழகின் ரகசியம்"

இவ்வாறு என் காதுகளில் கிசுகிசுத்து சென்ற அந்த காற்றின் பாதையில் திரும்பி பார்க்கையில் நான் பார்க்க தவறிய அந்த விரல் நுனி ஸ்பரிசம் என்னை மலர்த்தி விடைக்கொடுத்ததது. குறிப்பு: வெக்கம்கெட்டு அவர்கள் தனிமையை கெடுத்து நானும் ஒரு புகைபடம் எடுத்துகொண்டென்.... அவர்கள் மன்னிக்க பிறந்தவர்கள் நாம் மனிதர்கள்!!!!

Tuesday, January 19, 2010

COFFEE TIME - கிருக்கல்கள்

எத்தனை கொடுமையான காலங்கள் அவை இருட்டறையில் தனி கைதியாய். குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளுக்கு கூட விலங்குகளை அவிழ்த்து விட்டுத்தான் சிறையில் அடைப்பார்கள். நான் என்ன பாவம் செய்தேனோ நான் மட்டும் விலங்குகள் சுமந்தே இந்த சிறையில் சுற்றி சுற்றி விழுந்து கிடக்கிறேன்.

அய்யோ பசித்து தொலைக்கிறது! என்னை சுற்றியுள்ள விலங்குகளையே தின்று விடலாம் போல் பசிக்கிறது. எதாவது கொடுத்து தொலைங்களேன் என்று நான் கத்திய பொழுதெல்லாம் வெறும் புளித்த அமிழத்தை என் முகத்தில் தெளித்த அந்த கொடுமைகாரர்களை வதைக்க வேண்டும் போல் இருந்தது. என்னை சிறையில் அடைத்த அந்த அட்டுழியக்காரர்களின் முகத்தில் காரி உமிழவேண்டும் போல் இருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை. உண்பதும் உறங்குவதும் அட கழிப்பதும் ஒரே அறையில் தான். அதை விட கொடுமை அனைத்திற்க்கும் ஒரே நீரை பயன்படுத்துவது.. அடச்சே இந்த நீரில் எத்தனை நாட்கள் தான் நானும் துற்நாற்றமும் மாறி மாறி மிதப்பது...மூக்கை பொத்தலாம் என்று தோன்றியது. அய்யோ முக்கையா? இப்போதைக்கு வயிராற உட்கொள்வது காற்று ஒன்று தான் அதை மூடிகொண்டால் என்னாவது..!!

ஏன் செத்து தொலையேன் என்றது மனம். இருப்பினும் சாட்டையவிழ்க்கப்பட்ட பம்பரத்தின் கூர் முலை காம்புகளை போல என் நடு வயிற்றில் வாழ வேண்டும் என்ற ஆசை நறு நறுவேன சுழல்கிறது..நாட்கள் செல்ல செல்ல என்னில் எதோ மாற்றம். சிறையில் இருப்பவர் நலிந்து போவார். நான் மட்டும் புலர்ந்து போனேன். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற நப்பாசை.. சுவற்றின் அத்தனை கற்களையும் ஏறி மிதித்து அரைத்து வெளிச்சத்தின் துளியை தேட துவங்கினேன்.

சிறை சாலைக்கு வெளியே நல்ல மழையென்று நினைக்கிறேன்.. பிளவுபட்ட சுவற்றில் செங்கல் கரைந்து ஒழுகிகொண்டும் பெருகிகொண்டும் இருந்தது. நிச்சயம் தப்பிவிடலாம் என்று உறுதி செய்து கொண்டு பிராயாணப்பட்டேன். இப்பொழுது என்னை யார் சிறையில் அடைத்தார்கள் என்று மறந்து போயிருந்தது. எந்த வழியில் என்னை அடைத்தார்கள் என்று சுத்தாமாக நினைவில் இல்லை! எதோ நதிகள் இணைப்பு போராட்ட்ம் என்பது மட்டும் லேசாக நினைவில் உள்ளது..

சரி இப்போது எதை உடைத்துகொண்டு வெளியேறுவது முதலில் அத்தனை நீரையும் கொட்டி கவிழ்த்தேன் வழிந்தொடிய நீரின் பின்னே நானும் ஓடினேன் எதோ ஒரு அசைவு. அது தான் அதே தான் நான் தப்பிக்க வழி என்று முடிவு கட்டி முகூர்த்த நேரத்தில் முழங்குகிற மங்கல இசையின் போது மத்தளத்தை ஒங்கி உதைக்கிற விரல்களை போல நான் கண்டறிந்த பாதையில் முட்டி கொண்டிருந்தேன்.

சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அய்யோ.......!!!! மாட்டிகொண்டேன். என்னை காவலர்கள் கொத்தோடு தூக்கி வெளியே எரிந்தார்கள். தப்பிக்க முயன்ற என்னை இருக சுற்றியிருந்த விலங்குகளை கட்டிடத்திறப்பு விழா போல் வெட்டி தூக்கிஎரிந்தார்கள். என்னடா.. இது புதுமையாக இருக்கிறது தப்ப முயன்றவனுக்கு விடுதலையா என்று மகிழ்ந்த போது புரியாமல் காதில் நுழைந்த வார்த்தைகள் " CONGRATULATIONS!!! உங்களுக்கு சிசேரியன்ல ஆண் குழந்தை பிறந்திருக்கு"

எதோ குடுவையிலிருந்து தப்பி இன்று தான் உண்மையான சிறையில் மாட்டிகொண்டோமென்று என்று புரிந்து ஓவென அழுத என்னை BABY எவ்வளோ CUTE ஆ அழுகுது என்று என் கன்னத்தில் முத்தமிட்டால் வெள்ளை உடையணிந்த நர்ஸ்.....!!

Monday, January 18, 2010

தூரிகை

எழுத்துலக பிரம்மாக்கள் சஞ்சரிக்கின்ற இணையவெளியில் என்னையும் ஒரு கோளாக இணைத்து கொள்வதில் பெருமையடைகிறேன். இன்னும் எத்தனை நாட்கள்தான் இவர்களை இதமாய் கொளுத்தும் சூரியனென்றும்.. இருக்கமாய் கவ்வும் நிலவின் ஒளியென்றும்... எழுத்துலக ஆகாயத்தில் மின்னும் நட்ச்சத்திரங்களென்றும் வாய் பிளந்து நிற்பது என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்!!

நாம் ரசிக்கும் ஜாம்பவான்களின் முள்கிரீடத்தை பகிர்ந்துகொள்ளும் பேராசையில் எழுதுகிறேன்!!
எழுத்துலக பிதாமகன்களை நம்மால் எல்லாம் சந்திக்க முடியுமா என்று கேட்டு என்னையும் நலிந்தவர் பட்டியலில் சேர்த்து விட்ட கோபத்தில் எழுதுகிறேன்!!

எத்தனை நாட்கள் தான் பிறர் எச்சில் செய்து போட்ட கோட்டைகளை சப்பிகொண்டு மேடையில் பேச்சாளரென்று வலம் வருவது, என் பெயரில் ஒரு அருகம்புல்லெனும் நட்டு வைக்கவே இந்த இணையவலை முயற்சி...

என் வயதோருக்கு கம்பனும் கலிங்கத்துபரணியும் தெரியாமல் போனது எங்கள் குற்றமல்ல. தமிழை கற்றுகொடுத்து ஊதியம் பெறுவதை கூட ஒப்பு கொள்ளலாம். ஊதியம் பெறுவதற்காக டமிழை கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் வாய்த்ததற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களை பொறுத்த வரை குறுநாவல்கள் என்றால் குங்குமமும் ஆனந்தவிகடனும் தான்! சற்று முழுநீள நாவல்களென்று கொண்டால் கண்மணியயைம் ராணிமுத்துவையும் சொல்லலாம்!!

குற்றாலத்தில் ஐந்தருவி மட்டும் தான் ஸ்பெஷல் என்று பூகோளம் கற்றுகொடுத்த ஆன்றோர்கள் அந்த அருவியில் தோசையை நனைத்து சாப்பிட்ட ரசிகமணியையும் ராஜாஜியையும் அறிமுகப்படுத்தாது எங்கள் விதி! நாங்கள் வெற்றுக்கைகளுடன் அழைவதை டி.கே.சி தாத்தாவும், ல.சா தாத்தாவும் பார்த்து கண்டித்திருந்தால் நாங்களும் ஒரு வேளை கல்யாண்ஜியாகவோ கலாப்ரியாவாகவோ மாறியிருக்ககூடும்!

இன்று ஜெயமோகனையும் நாஞ்சிலையும் படித்துவிட்டு போதையேறி பித்துபிடித்து.. நானும் இந்த இணையவெளியில் மிதக்க ஆரம்பித்திருக்கிறேன். காதலன் அருகிலிருக்க அவன் கரம் பற்ற காந்த அலைகள் ரகசியமாய் ஈர்ப்பதைபோல்.. நானும் எழுத்தை நோக்கி ஈர்க்கப்ட்டவளாகி போனேன்!!

பள்ளி கல்லூரி நாட்களில் நான் தேடிய ஆசிரியர்கள் வாய்க்க பெறவிட்டாலும் சமீபத்தில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தவர்.. நமது நம்பிக்கை மாத இதழின் அசிரியர்..!!
பொதுவாக ஆசிரியர்கள் பாடத்தை சொல்லி கொடுத்துவிட்டுத்தான் தேர்வு வைப்பார்கள். இவர் பல கடினமான தேர்வுகளை வைத்து விட்டுத்தான் ஜெயமோகன் எழுத்துகளை என்னிடம் கொடுத்தார் (ஒரு வேளை உண்மையான ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்களோ??) எது எப்படியோ தேர்வு பெற்ற தைரியத்தில் நானும் பந்தையதில் பங்கேற்க்கிறேன். "PARTICIPATION IS FAR BETTER THAN WATCHING THE RACE"

அவருக்கு எம் பேனா பிசுபிசுத்து ஒழுகும் தமிழ் கூரும் நன்றிகள் பல பல!!!!!