Tuesday, October 9, 2012

சற்குருவும் --- SANTA க்ளாசும்....2

யாரிந்த அம்மா......?

எனக்கு சிறு வயதிலிருந்தே (இப்போதும் அப்படித்தான்). என்னை யார் அம்மா என்றாலும்  பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும், யார் இந்த பிள்ளை என்று கேட்டால் அதிகம் பிடிக்கும். பிடிப்பதையெல்லாம் உடைத்துவிடுவதற்கு தானோ இந்த அழைப்பு.  பற்று விடற்காகவே இந்த பற்றற்றான் பற்று என்னுள் பரவியிருப்பதாய் தோன்றியது. அனைத்தையும் மீறி அவரிடம் கேட்பதற்க்காகவும் செய்து காட்டுவதற்காகவும் பல விஷயங்களை தயார் செய்து வைத்திருந்தேன். அவரை காண்பதற்க்கு சொற்ப நிமிடங்கள் முன்பு வரை கூட உடன் வந்த குழுவினரிடம் நான் கொண்டு வந்தவைகளை எல்லாம் செய்தும்,  சொல்லியும் காட்டி ஒத்திகை பார்த்து கொண்டிருந்தேன். அப்படியான ஒத்திகை பட்டியலில் எனக்கிருந்த முதல் கேள்வி...

சற்குரு எனக்கு உங்க மொபைல் நம்பர் வேணும் ப்ளீஸ்... நான் குட் மார்னிங் குட் நைட் மெசெஜ் அனுப்பனும்.

இரண்டாவது அவருடைய கண்களை பார்த்தவாறு என் கண்களை குறுக்கி குறுக்கி சிரிப்பது.

என இன்னும் பல வஸ்துக்களுடன் அவர் முன் அமர்ந்தவரை மாத்திரம் தான் நான். அதன் பின் மேடையும் மாந்தர்களும் அவர் வசம். தலையின் உச்சியில் கண்களுக்கு புலப்படாத கயிற்றை கட்டி பிரபஞ்ச வேலைகளுக்கு மத்தியிலும் சரியான இடத்தில் கயிற்றை ஏற்றி இறக்கி பொம்மலாட்டத்தை நிகழ்த்தி கொண்டிருந்தார் பப்பட் மாஸ்டர். My Master. என்று அவரை பார்த்த பரவசத்தில் மனம் ஆங்கிலத்திலெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்தது ஆனால் என் கீழ் உதட்டின் கயிற்றை, அந்த சந்திப்பு முடியும் வரை மாஸ்டர் கீழ் இறக்கவேயில்லை. அதனால் மட்டுமே அக்கனத்தில் என்னால் பேசமுடியாமல்  போனது.

அவ்வப்போது ஒரு பனையோலை கூடையில் இருந்து விக்ஸை இன்ஹேலரை எடுத்து மூக்கில் உறிஞ்சியவாறே ஏதேதோ பேசினார். எனக்குத்தான் அது "ஏதேதோவாக" இருக்க முடியும். பிரபஞ்சத்தையும் தன்னையும் பிரித்து பார்க்காத ஒரு தன்மைக்கு என்னிடம் பேசுவதும் அந்த "ஏதேதோ" பேசுவதும் கூட ஒன்றாகத்தானே இருந்திருக்கும்.

தூரத்து கிழவியை காய்ந்த வயக்காட்டில் நெற்றியின் மீது கையை பிடித்து பார்ப்பது போல். வானத்தை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார். வெள்ளியங்கிரியின் மணல்களை, அரன் கால்பதிந்த தடங்களை,  துகள்களாக்கி சுழற்றி அடித்து கொண்டிருந்தது காற்று. அவருக்கும் காற்றுக்கும் புரிகின்ற பாஷையில் ஆங்கிலத்தில் எதையோ சொன்னார். பழைய சாமி படங்களில், எல்லா சாமிகளும் சுத்த தமிழ் பேசியே பழக்கப்பட்ட நமக்கு கடவுள் நேரில் பேசுவதே ஆச்சரியம். அதுவும் ஆங்கிலம் பேசும் கடவுள் என்றால்...... மலைப்படங்கவில்லை அந்த தரிசனத்தில். இன்னும் என் கீழ் உதட்டின் கயிறு மாஸ்டரிடம் தான்.

சற்குருவின் பாடல் தொகுப்புகள், கவிதைகள் எனப்பலதையும் பேசி தளர்ந்திருந்த அந்த இளவேனில் பொழுதில் அதிர்ந்து ஒலித்தது சற்குருவின் அலைப்பேசி.

நமஸ்காரம் என்று பேச்சை துவங்கியவர். வானத்தை பார்த்தவாறே எதோ பேசத்துவங்கினார். என் கண் முன்பு,  நான் செய்த ஒத்திகைகள் எல்லாம் என்னுடன் வந்தவர்களோடு சேர்ந்து நையாண்டி செய்து கொண்டிருந்தன. அவர் அலைப்பேசியை பரிதவிப்புடன் பார்த்தவாறே, கண்ணாலேயே ஈஷா சுவாமியிடம் ஜாடை காட்டினேன். அப்போதைக்கு என் கண்களின் கயிறு மட்டும் சற்று தளர்வாக விடப்பட்டிருக்க வேண்டும் மாஸ்டரால். ஓவியத்தில் தூரிகை வரையும் மெல்லிதான கோடுகளை போல் அங்கமர்ந்திருந்த அனைவர் உதட்டிலும் ஒரு குறும்பு புன்னகை. சிரிப்பு காட்ட வேண்டாம் என்று ஜாடை வேறு.

அலைப்பேசி உரையாடலுக்கு பின் மெல்ல சற்குரு அந்த சந்திப்பின் முடிவிற்க்கு வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஒரு ஷணப்பொழுதில் நம் சிகையை கலைத்துவிடுகிறது அவர் நெற்றிக்கு நேர் கைகளை குவித்து வணங்கி விடைக்கொடுப்பது. ஒவ்வொறுவராய் வணங்கி ஆசிப்பெரும் பொழுது அவர்களுக்கு ஒரு மலரை கொடுத்தார் சற்குரு. என்னுடைய முறை இது.

காலில் விழ வேண்டும் விழுந்துவிட்டேன். அவருடைய கால்களை தொடலாமா கூடாதா என்ற குழப்பத்திலேயே சில நொடிகள் கழிந்து போனது. நாம் அவர் காலில் வணங்கும் இந்நேரம் அவர் நமக்காக என்ன செய்து கொண்டிருப்பார் என்ற சலனத்தில் சில நொடிகள் என மிருதுவாக ஆடிக்கொண்டிருந்த என் மனதின் பெண்டுலம். சட்டென்று நின்ற கனப்பொழுதில் என்னை ஒரு நீரோவியம் போல் உணர்ந்தேன். கடவுளின் ரூபத்தை பிரதிபலிக்கிற சலசலப்பு இல்லாத நதியை போல் அவர் கால்களின் கீழ் ஓடிக்கொண்டிருந்தேன். உடல் உயிர் மனம் உணர்வு என அவர் சொல்லும் அந்த நான்கும், எனக்குள்  எந்த வேறுபாடுமின்றி சங்கமமாகி அவர் கால்களை நனைத்து கொண்டிருந்தது. நிழவின் நிழல் கீற்றும், அன்று சுழற்றி விசிய காற்றின் ஒரு துகளும் கூட என் நதியின் மிருதுவான ஓட்டத்தை கலைத்துவிட்டிருக்க கூடும் அப்படியான நிசப்தத்தில் தலையுயரித்தி, நீட்டிய என் உள்ளங்கையில் கனிந்து விழுந்தது.

ஊதா நிற பூ.

சொக்கி - 1

பிடிக்கும் என்ற வார்த்தை அத்தனை இலாவகமாக தாண்டி விட முடியாது. அதை தாண்டுவது,  தாண்ட மனமில்லாமல் தவிப்பது, தாண்டிவிட வேண்டும் என்ற வீம்பில் மூக்குடைவது என அனைத்தும் சாத்தியம் 'பிடிக்கும்' என்ற வார்த்தையின் முன். ஆனால் எனக்கு வேலைக்கு போக பிடித்திருந்தது. சலவை துணியில் மடமடப்பில், கலர் கலர் வண்ணத்தில் தொங்கும் அடையாள அட்டை மார்பின் இடையில் விழும் அந்த ஸ்பரிசம் எனக்கு பிடித்திருந்தது. அதிலும் நம் பொருட்கள் வைப்பதற்காக பிரத்தியேகமான அறைகள் தருவார்கள் அதன் சாவியும் அடையாள அட்டையுமாய் சேர்ந்து ஒரு கொத்தாக தொங்கும் அந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது. டப்பர்வேர் டப்பாக்கள் அதன் கையடக்க பைக்கள், பூப்போட்ட வாட்டர் பாட்டில் அதன் மேல் ஒரு ஸ்டீல் கேப். வேலைக்கு போகிறோம் என்றாலே வந்து விடுகிற கர்வம்.... வேலைக்கான அலுவலகத்திற்க்கு கொண்டுவிடுகிற தந்தை. காலையிலிருந்து மாலை வரை மூளையை அடைத்து கொள்கிற எதோ ஒரு ஓட்டம் என அனைத்துமாய் எனக்கு வேலைக்கு செல்வது பிடித்திருந்தது.

இந்த ஏற்பாடுகளினாலேயே நான் செய்யும் வேலையும் எனக்கு பிடிக்க வேண்டியதாய் இருந்தது. பல நேரங்களில் அற்ப சந்தோஷங்களுக்காக பல நிர்பந்தங்களை ஏற்படுத்தி கொள்வது என் இயல்பாகிவிட்டது. நுரைகளாக உடைந்து ஒன்றுமில்லாததாக ஆகியிருக்க வேண்டிய  அலைகளை உப்புக்கு குழி வெட்டுவது போல் எனக்குள் தேவையில்லாமல் உள்வாங்கி தொந்தரவுக்குள்ளாகுவது ஒரு நோய் போல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அந்த வடநாட்டு பயணத்திலிருந்து.

ஆசாத் தான் என்னை வடநாட்டுக்கு அனுப்பி வைத்தார். கலை நிகழ்ச்சி முதல் கருமாரி வரை அனைத்தையும் எடுத்து நடத்தும் இவன்ட் மேனெஜ்மென்ட்(event management) நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதை விடவும் சுழற்சங்கத்தில் முக்கிய பங்கில் இருந்த்தாலேயெ அன்று எங்கள் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்க நிகழ்ச்சிக்கு தலைமேயேற்று நடத்தினார். எனக்கு படிக்க பிடிக்கும் ஆனால் யாராவது பாடம் நடத்தினால் பிடிக்காது.

வணிக பாடங்களில் கணக்கு வகுப்புகள் பெரும்பாலும் பொருத்து கொள்ளும் தன்மையுள்ளனவாய் இருக்கும். அதை தவிர்த்த சில அனுபவ பாடங்கள் உண்டு. குறிப்பாக அதற்கு பெண் பேராசிரியர்கள் வந்து விட்டால்... புல்ஸ்டாப், கமா போன்ற அத்தனை குறியீடுகளுக்கு விளக்கம் கிடைப்பது தின்னம். நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த பெண்ணை உரக்க படிக்க சொல்லி. அதன் கடைசி வரியை மாத்திரம் பேராசிரியர்  அழுத்தமாக சொல்லி முடித்துவைப்பார். அப்படியாகின் அவர் அப்பாடத்தை நடத்தி விட்டார் என பொருள் கொள்ளல் வேண்டும். இப்படியான  வகுப்புகளில் வருகைபதிவோடு கெளரவ விடுப்பு கொடுத்து சகல மரியாதையுடன்  சுழற்சங்க கூட்டம் என்றால் அனுப்புவார்கள்.

அந்த பொன்னான திட்டத்தினை பயன் படுத்தி கொள்ளவதற்காக நானும் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டேன். "கேலிக்கு உள்ளாவது, திறமையின் உச்சம் தொட்டு காட்டுவது", இவை இரண்டும் பாட அல்லது ஆட துவங்கிய அந்த கனத்திலேயே புலப்பட்டுவிடும் என்பதால். மேடையில் பாடுவது, ஆடுவது இதை தவிர்த்த எந்த பயமும் எனக்கு இருந்ததில்லை. அது நானாக இருந்தாலும் சரி. வேறு யாராக இருந்தாலும் சரி. எனக்கு பேசிவிடுவது சுலபமாக இருந்தது. அந்த செளகரியத்தில் ஆசாத் தலைமேயேற்ற விழாவில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நான் ஆற்றிய உரை அல்லது உரையாக கருதப்பட்டது பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பண்டமாற்றம் செய்வது போல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே இளைஞர்களை கலாச்சாரம், பண்பாடு நல்லுறவு என அனைத்தையும் பரிமாறி கொள்ளும் விதமாய் அந்த ஆண்டிற்க்கான "Inter state youth exchange" நடைபெற்றது. கோவையிலிருந்து நான்கு இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது அசாத்தின் பொறுப்பு. அவர் முதலில் முன்மொழிந்த பெயர் என் பெயர்.

சொக்கி.

எனக்கு வாழ்வில் ஜெயித்துவிட வேண்டும் என்ற வேகம் எப்போதும் உண்டு. எப்படி, எங்கே, எப்போது, எவ்வாறு என அனைத்து ஏனா கேள்விகளையும் புறம் தள்ளிவிட்டு முன்னேறிவிட துடிக்கிற வேகம் என்னுள் இருந்தது. எனக்கு ஒரு பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகர்களை பிடிக்கும். அந்த கதையை பிடிக்கும். ஆனால் வாழ்க்கை அப்படி என்னை வாழ அனுமதிக்கவில்லை. வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பொழுதுகளில்,  வாய்ப்புகள் எது தவிர்க்கப்படவேண்டியது எது என்று தெரிந்து விட்டாலே பாதை எளிதாகிவிட்டிருக்கும்.  இப்படியொன்று நடக்க நாம் அனுமதித்து விட்டோமே என்று மனம் திணறி தவிக்கிற சம்பவங்கள் பல. இன்று நினைத்தாலும் அதில் ஒன்றாக சேர்ந்து விட்டது நான் வடநாட்டுக்கு போக இசைவு தெரிவித்து அந்த துவர்ப்பான தருணம்.

முடியாது என்று சொல்ல முடிந்திருந்தால் எத்தனை சுலபமாகிவிட்டிருக்கும் என்  வாழ்க்கை. அப்படி சொல்ல முடியாதனாலேயே எனக்கு விருப்பமற்ற ஒரு பாரம் என் சுயவரலாற்றின் நினைவு முதுகில் ஏறிக்கொண்டது. நான் இடரித்தவித்த அந்த நொடிகளில் எல்லாம் என்னொடு துணையாய் அருவமாய் பின் தொடர்ந்தேயிருக்கிறது எதோவொன்று.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்.