Saturday, April 10, 2010

காற்றாடி

அன்று என் மனம் அதிகாலையிலே எழுந்து விட்டது. இன்னும் என் கண்கள் விழித்து கொள்ள சில மணி நேரம் பிடிக்கும். எவர் சில்வர் பாத்திரங்களின் சத்தமும், சமையலறை நீர் குழாயில் சொட்டி கொண்டிருக்கும் நீர் துளிகளும் என் அம்மா எழுந்து விட்டதை உணர்த்தியது. முழுமையாக விழித்த மனத்துடன், கண்கள் மட்டும் மூடி கிடப்பது, நம் மனதுக்கு பிடித்த காதலியுடன் தனி அறையில் இருப்பது போன்ற சுகம். கண்களில் துவங்கி உயிர் சுரக்கும் அணு வரையில் நிரம்பி வழியும் அந்த இருள் தான் நம் கற்பனைகள் எல்லாம் கை கால் முளைத்து ஆட்டம் போடும் அழகிய மேடை . அன்று என் கற்பனை மேடையில், என் வருங்கால கணவர் என் கால் விரல்களில் சொடுக்கு எடுத்து மென்மையாக என் பாதங்களை வருடி கொண்டுஇருந்தார் என் மனதில் அவரையும் என் உடலில் அவர் உயிரையும் சுமக்கும் பெருமிதத்தில்.

அப்பொழுது, என் தலையின் மேல் கவிழ்ந்து இறங்கி கொண்டிருந்த துருபிடித்த மின் விசிறியின் காற்று என் கற்பனை ஆட்டதிற்கு மேலும் வலு சேர்த்து கொண்டிருந்தது. காட்டருவி போல் நல்ல சத்தத்துடன் குளுமையான காற்றை பொழிந்து கொண்டிருந்தது அந்த காற்றாடி. இருபத்தி நான்கு ஆண்டுகள் பழமை வாய்ந்த காற்றாடி. என் பெற்றோர் திருமணத்திற்கு சீதனமாக வந்த காற்றாடி. பழுப்பு நிற காற்றாடி, வண்ணம் அடிக்காமலேயே காபி நிறத்தில் மாறியிருந்தது. முதல் நாள் பள்ளி செல்ல மறுக்கும் பிள்ளையின் கைகளை அம்மா இழுக்கிற போத விம்மி விம்மி கதறுகிற குழந்தையின் முனுகல் போன்றது அதன் டர்.. டர்.. என்ற ஒவ்வொரு சுழற்சிக்குமான சத்தம். என் சிறு வயதில் கேரளா கோயில்களில் நான்கு கைகளை விரித்து என்னை பயத்திலும் பக்தியிலும் ஆழ்த்திய உக்கிரமான லட்சனமான காளியின் அம்சம் அந்த காற்றாடி. அது இயங்குவதற்காக மின்சாரம் பாய்ச்சப்பட்ட அடுத்த நொடியே காளிக்கு உயிர் வந்ததை போல் தன் கைகளை மெல்ல சுழற்றி அட ஆரம்பிப்பாள். ரேகுலேடரின் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு ஆட்டம் தான்.


எண் ஒன்று, இப்பொழுது அம்பிகை சாந்த சொருபினி நாட்டியம் பழகும் பெண் போல மெல்ல அபிநயம் பிடிப்பாள். மதிய வெயிலில் தேகத்தில் மலர்ந்திருக்கும் வியர்வைகளை கொய்வதற்கு இந்த காற்று போதுமானது. எண் இரண்டு, பரதம் பயின்ற இளம் பெண்ணின் முதல் அரங்கேற்றம் போல... காற்று வருகிறதோ இல்லையோ ஆட்டத்திற்கு குறையில்லை. வீட்டிக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் விதமாய் "வாங்க வாங்க உக்காருங்க ஏய் அந்த பேன் போடு... என்ற அசடு வழியும் வாசகத்துடன் காற்றாடியை இரண்டாம் எண்ணில் வைத்தால் தான் விருந்தோம்பல் பண்பிற்கு உயிர் சேர்த்த மிதப்பு. எண் மூன்று, இது நாட்டிய பள்ளியில் சற்று உடல் தடித்த 35 வயது மதிக்க தக்க நடனஆசிரியர் பயிற்றுவிக்கும் ஆட்டம் போன்றது. இந்த ஆட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது காற்றாடியின் மைய பகுதி. தஞ்சாவூர் பொம்மைகள் செய்ய நன்கு பிசைந்து உருண்டை கட்டிய மண்ணில் பொம்மையின் தலையையும் இடையையும் மாத்திரம் மசித்து உருட்டியது போல் தடக்.. தடக்.... என்று என்ன ஒய்யாரமான ஆட்டம். அனைத்தையும் துறந்த துறவி போல், துளிர்த்து கிளம்பும் வியர்வைகள் எல்லாம் அதன் துவக்கத்திலேயே நீராவியாகி கரிந்து போகும் மெல்லிய சுகம் மூன்றாம் எண்ணில் நம் வியர்வை துவாரங்கள் அனைத்தும் மோட்சம் கொள்ளும். இதற்க்கு மேலும் சில எண்கள் ரேகுலடோரில் இருந்த போதும். ஏனோ அவை இயங்குவது இல்லை.

இப்பொழுது என்னால் ஓரளவு கண்களை திறக்க முயற்சிக்க முடிகிறது. இமைகள் ஒட்டிய திரை கிழித்து வெளிச்சம் உள்ளே புகும் முன் மீண்டும் அவை ஒட்டிக்கொண்டு விடுகின்றன ம்ம் இன்னும் என் புற கண்கள் புலர நாற்பது நிமிடங்கள் ஆவது பிடிக்கும். இது தான் கற்பனை களியாட்டம் போடும் நேரம். இன்னும் அந்த குளுமையான தழுவலை உணர்கிறேன். மனித இனத்தை தவிர மற்ற அணைத்து உயிர் உள்ளவைகளும்.. உயிர் அற்றவைகளும்.. அதன் செயலை எதற்காகவும் யாருக்காகவும் நிறுத்தி கொள்வதில்லை. நாம் கடந்து செல்லும் ஒவ்வொன்றும் இல்லை நம்மை கடந்து செல்லும் ஒவ்வொன்றும் மனித இனத்துக்கான ஏதோ ஒரு செய்தியை தாங்கி கொண்டு வருகின்றன. காற்றாடிகளின் சேவையும் அது போல் தான்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன். பொதுவாக பசியை தாங்கும் வல்லமை என்னிடம் இல்லை. அன்று என் குடல் சுருங்கி விரியும் சத்தத்தை என்னால் நன்றாகவே கேட்க முடிந்தது. ஏதோ ஒரு அமிலம் என்னுள் குடம் குடமாக சுரந்து கொண்டு இருந்தது. அப்பொழுது என்னை கடந்து சென்ற மரங்களும் செடிகளும் அவியலாகவும், பொறியலாகவுமே தெரிந்தன. என்னை உரசிய தென்றல் திரவ வடிவில் இருந்திருந்தால் அப்படியே உறிஞ்சியேனும் குடித்திருக்கலாம். திருமணமான புதிதில் மனைவியை தேடும் கணவனை போல் அடுப்பறை பாத்திரத்தில் எனக்கான உணவை மூர்கமாக தேட முனைந்தேன். அந்தோ பரிதாபம்! தீ மிதித்து இறங்கிய இளம் பெண்ணின் பாதம் போல் அணைத்து உணவுகளும் மிக சூடாக பரிமாறப்பட்டன. என் பசி ஆரவேண்டுமாகின் முதலில் அந்த உணவு ஆறவேண்டும். மெல்ல ஏன் தலையை உயர்த்தி பார்த்தேன், நேற்று இரவு முழுவதும் உழைத்து களைத்த போதும் அதை அணைக்க மறந்த இந்த இரக்கமில்லா கருங்காலிக்கு தன் ஒப்பற்ற சேவையை புன்னகையுடன் ஆற்றி கொண்டு இருந்தது அந்த காற்றாடி.

நான் பிறக்கும் முன்னே இந்த உத்திரத்தில் வௌவால் போல் தொங்கி கொண்டு, இன்று எனக்கும் சாமரம் வீசியபடி இருக்கும் இந்த காற்றாடி எத்தனை பார்த்திருக்கும். ஆனால் நிச்சயம் எதையும் சுவரசியமாக பார்த்திருக்காது. வேண்டுமானால், வந்த புதிதில் ஏதோ ஒன்று இரண்டு பார்த்திருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் இதன் நண்பர்களும் உறவினர்களும் இன்று எந்த உத்திரத்தில் தொங்கியபடி எதனை விவகாரங்களை பார்த்துகொண்டு இருகிறார்களோ? நாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து பல கிசு கிசு களையும், ரகசியங்களையும் பரிமாறி கொள்வது போல் இவைகளும் சந்தித்து கொண்டால் அடேயப்பா!!!

இந்த காற்றாடி இதற்கு முன் பிறவியில் என் நண்பனாகவோ இல்லை நான் விரும்பி படிக்கும் புத்தகத்தின் எழுதுக்கலாகவோ இருந்திருக்க கூடும். இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு, நான் அற்ற வேண்டிய செயல்களை கடமைகளை யாருக்காக நிறுத்தி வைத்தேனோ அவர்கள் என்னை புறக்கணித்து அவர் கடமைகளை செயல்களை செய்கிற போது. என்னை போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது என்று வருந்தி இருக்கிறேன். ஒரு நண்பனை போல் அந்த வருத்தத்தையும் என்னிடம் இருந்த போக்கிய அதிசயம் இந்த காற்றாடி. தான் இன்றோடு நிராகரிக்க பட இருக்கிறோம் என்பதை தெரியாமல் எனக்கும், என் அரை சுவற்றில் கூடுதல் செங்கலாய் ஒட்டி கொண்டு இணைப்புக்காக காத்திருக்கும் அந்த குளிர்சாதன பெட்டிக்கும் தன் உண்மையான சேவையை ஆற்றி கொண்டு இருந்தது. ஏனோ இப்பொழுது என்னை தீண்டிய அந்த காற்றில் குளுமையுடன் சேர்ந்து உப்பு கரிப்பின் பிசு பிசுப்பும் வந்து ஒட்டி கொண்டது. இப்பொழுது மனமும் கண்களும் நன்றாகவே விழித்து கொண்டது இனி என்னால் உறங்க முடியாது.....!!!!

No comments:

Post a Comment