Tuesday, February 16, 2010

தூரம்

அன்று இரவு எழு மணியிருக்கும். இன்னும் முழுவதுமாக இருட்டவில்லை. L.K.G குழந்தை டிராயிங் காம்பிடிஸனில் இயற்க்கையை வரைந்தது போல் இருந்தது. வெளரி போன வானம். ஒரு ரூபாய் நாணயம் வைத்து வரைந்தது போல வட்ட நிலா. கோணலான மரம். நம்மூர் நகரங்களை போல் மரங்களுக்கு கலர் கலர் வண்ணம் அடித்து 4கி.மி 5 கி.மி என்று தொலைவினை குறிக்கும் பழக்கம் அந்த நகரத்துக்கு, ஏன் அந்த நாட்டுக்கே இல்லை. அடுத்த அரைமணி நேரத்தில் திருமணம் ஆகபோகும் இந்திய மணப்பெண் போல் மிக நேர்த்தியுடன் அந்த நாட்டு மரங்களை அலங்காரம் செய்திருந்தார்கள். அதில் சில முதிர் மரங்களும் அடங்கும்.

வெரிச்சோடி போன வீதிகள். பல மைல்கள் தள்ளி சாலையோரத்தில் தென்னைஓலை குடிசையில் குதித்து விளையாடுகிற தவளை போல், தூண்டில் விளக்குகளில் துள்ளி குதிக்கிற துளி வெளிச்சம். கோடிகணக்கான யானைகளை கவிழ்த்து போட்டது போல் கருமையான இருட்டு என்று இரவுக்கே உரித்தான எந்த வரைமுரையும் அந்த நாட்டுக்கு இல்லை. இரவு வரும் நேரத்தில் இவர்கள் உறங்குவதில்லை. இவர்கள் உறங்கும் நேரத்தை இரவென்று கொள்ளலாம். காதலை சுவைக்கிற நள்ளிரவில் ரெஸ்ட்ரான்களில் உணவை சுவைக்கிற வேடிக்கையான மனிதர்கள்.

நடு ரோட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காட்டிலும்.. அந்த நாடேங்கும் ஓங்கி வளர்ந்திருக்கும் கட்டிடங்களுக்கு கம்பீரம் அதிகம்.மனிதர்கள் ஆடை அணிவதை எத்தனை முக்கியமானதாக கருதுகிறார்களோ... அதே முக்கியத்துவத்தை உதடுகளில் அணிகிற புன்னகைக்கும் கொடுப்பது இந்நாட்டு மக்களின் சிறப்பு. புன்னைகையில்லாத நிர்வாண முகங்களை இந்நாட்டில் காணமுடிவதில்லை. பல வருடங்கள் பார்த்து பழகி உய்த்து போன உறவினர்களை காண்பது போல் கனிவான பார்வை. கிழக்கு ஆசிய நாடு. நம் நாட்டு கேரள மணம். மலேசியா என்று பெயர். நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் சரியான பொருத்தம் தான்.

அந்நகரின் மையபகுதியில் இரண்டு பெண்கள் பிரசவ வலியில் துடிக்க, அந்த இரண்டு பெண்களுக்கும் பிரசவம் பார்த்தது ஒரே மருத்துவர் தான். இரண்டு குழந்தைகளுக்கும் இடையே நெருக்கமான ஒரு தொலைவு. முதல் குழந்தை: கண்ணில் கூர்மை. தன் உதடுகளை ஒரு புறமாய் இழுத்து சிரிக்கையில் ஆண்மகனுக்கே உரிய கர்வமும் கம்பிரமும் கவ்வியிருந்தது. அடுத்தது பேரழகி.
வாழையிலை வடிவில் ரோஜா இதழ் கையில் மிதப்பது போல் ஒருணர்வு அந்த பெண் குழந்தையை கையில் ஏந்துவோர்க்கு. இந்த இருவருக்கும் இடையில் பரிணாமத்தில் முழுவதுமாக வளர்ச்சியடைந்த ஒரு ஆண் கால் நீட்டி படுக்கும் அளவு தூரம்.

இந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையே மழலையின் குறும்பு.. இளமையின் கொதிப்பு என எத்தனையோ பருவங்கள் மாறின. இன்று இவர்கள் காதலர்கள். ஆனால் இவர்களின் நடுவே இருந்த தூரம் மட்டும் ஆக்ஸிஜன் நிரப்பப்பாடாத இதயமாகவே துடித்திருந்தது. "தூரம்". இந்த வார்த்தையின் பக்கவிளைவே அதை அடையமுடியாத தவிப்பு தான். இவர்களுக்கும் அந்த தவிப்பு கடும் கனலாய் தகித்திருந்தது. ஆனால் பாலாய்போன உலகம் அவர்களை சேர்த்தே பார்த்தது.

கண்ணாடி கரையோரம் கால் வீசி திரியும் வண்ண கந்தர்வானாய் அவன் நிமிர்நிதிருக்க. அவன் அருகே பனிமலை குடைந்து பார்வையின் நீளம் கடைந்து. பளீரென சிரிக்கும் பூப்படைந்த பெண் வசிகரமாய் வளர்ந்திருந்தாள். காதலர்களின் உற்ற நண்பன் தனிமை. அய்யோ பாவம் இவர்களிக்கு மட்டும் அது வாய்க்கவேயில்லை.

மங்கையவள் நெற்றியில் சரிந்தொடும் பூங்குழலை மன்னன் இவனுக்கு ஒதுக்கத்தான் ஆசையிராதோ? காண்டீபம் உயர்த்தி கண்ணின் கருமணியை ஓராமாய் நகர்த்தி தையலவள் கூர்ந்து பார்க்கையில் காளையாம் இவனுக்கு கண்மணியை மடியில் சாய்த்து கம்பன் வரிகள் பாட ஆசையெழாதோ?? இவர்களிடையே ஏன் இந்த தூரம்? சேர்ந்தே பிறந்த இவர்கள் சேராமல் போனது விதி.

ஆனால் இந்த காதலர்கள் விலகியிருந்து காதலில் துடிப்பதை காண்பது அத்தனை அழகு. கொஞ்சம் மனிததன்மையற்ற நிலை தான். இருப்பின் அந்த அழகினை காண்கையில்...... அரைகை அன்னமாக இருந்தால் அள்ளி தின்றிருக்கலாம். என் மனம் மசித்த காதலனாக இருந்திருந்தால் என் மார்புக்கும் அவன் முதுகுக்கும் மானசீக பாலம் அமைத்திருக்கலாம். நங்கை நான் சூடுகின்ற மலராக இருப்பின் நாசி கருக நுகர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. என் கையாலாகத தனத்தால் அழகை ரசிக்க மட்டுமே முடிந்தது.

பகலில் தான் இந்த நிலை இரவில் அனைவரும் உறங்கியபின் இவர்கள் தனிமையில் சந்திக்க வாய்ப்புள்ளதோ என்று சிந்தித்தால் இந்த ஊருக்கு பகலேது இரவேது கடிகாரத்திற்க்கு மட்டும் தான் அந்த பாகுபாடு இங்கு வாழும் மக்களுக்கு இல்லை.

இவர்கள் அழகை ஆராதிக்க அங்கே எழுப்பபடுகிற கட்டிடங்களுக்கு அஸ்த்திவாரம் அமைக்கும் கவனத்துடன் நீர் குமிழ்கவிழ்த்த ஜன்னல்களும் உருவாக்கப்பட்டு விடுகின்றன. அந்த ஜன்னலின் திரைசீலையை விலக்கி அந்த காதலர்களின் அந்தரங்கத்தை காண்பதில் கொள்ளை ஆனந்தம். அருகில் இருந்தும் தொலைந்து போன இந்த காதலர்களை காண உலகின் அனைத்து காதலர்களும் கைகோர்த்து வந்து கண்ணீர் மல்கி நிர்க்கும் அந்த இருவர் முன் புன்னகைத்து படம் எடுப்பது தான் கொடுமை.

உலக காதலர்கள் மட்டுமல்ல அந்த காதலர்களின் தனிமையை கெடுத்த பாவபட்டியலில் தமிழக எழுத்தாளர்களும் அடங்குவர். குற்றம் புரிந்த உணர்வு சூடுவதர்க்குள் இவர்கள் பொல்லாத கவிமனம் களியாட்டம் போடுகிறது. காதலியை தீண்டமுடியாமல் வக்கத்து நிர்க்கும் காதலனும்.. பெண்மை கரையாமல் கலங்கி நிற்க்கும் அந்த காதலியும் இவர்கள் கண்ணுக்கு உரித்த மக்காசோளம் போல் தோன்றினார்களாம்.



இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்? ட்வின் டவர் என்று செல்லாமாக (அய்யோ பாவம்) அழைக்கப்பட்டு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் மிளிர்ந்து கிடக்கும் இவர்களை வெறும் கட்டிடம் என்று சொல்ல.. என்னவனை மனமருகில் வைத்து தொலைத்து தொலைத்து காதலிக்கும் என் கண்களுக்கு மனம் வரவில்லை அவர்களை காதலர்களாகவே பார்க்க தோன்றியது. அண்டை நாட்டு காலச்சாரத்தை அறிந்து கொள்ளும் சாக்கில் பத்திரிக்கையாளர் என்ற முறையில் சென்றிருந்த போது. இந்த ட்வின் டவருடன் நடத்திய மானசீக பேட்டியிது...

நூற்றுக்கணக்கான துவாரங்களை கொண்ட "ட்வின் டவர்" காதலர்களின் உள்ளே நுழைந்த காற்று என்னையும் தீண்டி சென்றது கீழ்கண்ட வரிகளுடம்

" கோடி கணக்கான மின்னல்கள் ஒரு சேர பாய்வதை போல் நாங்கள் மின்னிகிடப்பதை அழகென்று ரசிக்கிறார்கள்..! தள்ளியிருக்கும் என்னவளை ஒற்றை விரல் நீட்டி தீண்டும் அந்த ஊசி முனை நிமிடங்களில் எங்களில் எழும் பரவசமே இந்நகர் முழுதும் பொங்கி வழியும் அழகின் ரகசியம்"

இவ்வாறு என் காதுகளில் கிசுகிசுத்து சென்ற அந்த காற்றின் பாதையில் திரும்பி பார்க்கையில் நான் பார்க்க தவறிய அந்த விரல் நுனி ஸ்பரிசம் என்னை மலர்த்தி விடைக்கொடுத்ததது. குறிப்பு: வெக்கம்கெட்டு அவர்கள் தனிமையை கெடுத்து நானும் ஒரு புகைபடம் எடுத்துகொண்டென்.... அவர்கள் மன்னிக்க பிறந்தவர்கள் நாம் மனிதர்கள்!!!!

Tuesday, January 19, 2010

COFFEE TIME - கிருக்கல்கள்

எத்தனை கொடுமையான காலங்கள் அவை இருட்டறையில் தனி கைதியாய். குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளுக்கு கூட விலங்குகளை அவிழ்த்து விட்டுத்தான் சிறையில் அடைப்பார்கள். நான் என்ன பாவம் செய்தேனோ நான் மட்டும் விலங்குகள் சுமந்தே இந்த சிறையில் சுற்றி சுற்றி விழுந்து கிடக்கிறேன்.

அய்யோ பசித்து தொலைக்கிறது! என்னை சுற்றியுள்ள விலங்குகளையே தின்று விடலாம் போல் பசிக்கிறது. எதாவது கொடுத்து தொலைங்களேன் என்று நான் கத்திய பொழுதெல்லாம் வெறும் புளித்த அமிழத்தை என் முகத்தில் தெளித்த அந்த கொடுமைகாரர்களை வதைக்க வேண்டும் போல் இருந்தது. என்னை சிறையில் அடைத்த அந்த அட்டுழியக்காரர்களின் முகத்தில் காரி உமிழவேண்டும் போல் இருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை. உண்பதும் உறங்குவதும் அட கழிப்பதும் ஒரே அறையில் தான். அதை விட கொடுமை அனைத்திற்க்கும் ஒரே நீரை பயன்படுத்துவது.. அடச்சே இந்த நீரில் எத்தனை நாட்கள் தான் நானும் துற்நாற்றமும் மாறி மாறி மிதப்பது...மூக்கை பொத்தலாம் என்று தோன்றியது. அய்யோ முக்கையா? இப்போதைக்கு வயிராற உட்கொள்வது காற்று ஒன்று தான் அதை மூடிகொண்டால் என்னாவது..!!

ஏன் செத்து தொலையேன் என்றது மனம். இருப்பினும் சாட்டையவிழ்க்கப்பட்ட பம்பரத்தின் கூர் முலை காம்புகளை போல என் நடு வயிற்றில் வாழ வேண்டும் என்ற ஆசை நறு நறுவேன சுழல்கிறது..நாட்கள் செல்ல செல்ல என்னில் எதோ மாற்றம். சிறையில் இருப்பவர் நலிந்து போவார். நான் மட்டும் புலர்ந்து போனேன். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற நப்பாசை.. சுவற்றின் அத்தனை கற்களையும் ஏறி மிதித்து அரைத்து வெளிச்சத்தின் துளியை தேட துவங்கினேன்.

சிறை சாலைக்கு வெளியே நல்ல மழையென்று நினைக்கிறேன்.. பிளவுபட்ட சுவற்றில் செங்கல் கரைந்து ஒழுகிகொண்டும் பெருகிகொண்டும் இருந்தது. நிச்சயம் தப்பிவிடலாம் என்று உறுதி செய்து கொண்டு பிராயாணப்பட்டேன். இப்பொழுது என்னை யார் சிறையில் அடைத்தார்கள் என்று மறந்து போயிருந்தது. எந்த வழியில் என்னை அடைத்தார்கள் என்று சுத்தாமாக நினைவில் இல்லை! எதோ நதிகள் இணைப்பு போராட்ட்ம் என்பது மட்டும் லேசாக நினைவில் உள்ளது..

சரி இப்போது எதை உடைத்துகொண்டு வெளியேறுவது முதலில் அத்தனை நீரையும் கொட்டி கவிழ்த்தேன் வழிந்தொடிய நீரின் பின்னே நானும் ஓடினேன் எதோ ஒரு அசைவு. அது தான் அதே தான் நான் தப்பிக்க வழி என்று முடிவு கட்டி முகூர்த்த நேரத்தில் முழங்குகிற மங்கல இசையின் போது மத்தளத்தை ஒங்கி உதைக்கிற விரல்களை போல நான் கண்டறிந்த பாதையில் முட்டி கொண்டிருந்தேன்.

சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அய்யோ.......!!!! மாட்டிகொண்டேன். என்னை காவலர்கள் கொத்தோடு தூக்கி வெளியே எரிந்தார்கள். தப்பிக்க முயன்ற என்னை இருக சுற்றியிருந்த விலங்குகளை கட்டிடத்திறப்பு விழா போல் வெட்டி தூக்கிஎரிந்தார்கள். என்னடா.. இது புதுமையாக இருக்கிறது தப்ப முயன்றவனுக்கு விடுதலையா என்று மகிழ்ந்த போது புரியாமல் காதில் நுழைந்த வார்த்தைகள் " CONGRATULATIONS!!! உங்களுக்கு சிசேரியன்ல ஆண் குழந்தை பிறந்திருக்கு"

எதோ குடுவையிலிருந்து தப்பி இன்று தான் உண்மையான சிறையில் மாட்டிகொண்டோமென்று என்று புரிந்து ஓவென அழுத என்னை BABY எவ்வளோ CUTE ஆ அழுகுது என்று என் கன்னத்தில் முத்தமிட்டால் வெள்ளை உடையணிந்த நர்ஸ்.....!!

Monday, January 18, 2010

தூரிகை

எழுத்துலக பிரம்மாக்கள் சஞ்சரிக்கின்ற இணையவெளியில் என்னையும் ஒரு கோளாக இணைத்து கொள்வதில் பெருமையடைகிறேன். இன்னும் எத்தனை நாட்கள்தான் இவர்களை இதமாய் கொளுத்தும் சூரியனென்றும்.. இருக்கமாய் கவ்வும் நிலவின் ஒளியென்றும்... எழுத்துலக ஆகாயத்தில் மின்னும் நட்ச்சத்திரங்களென்றும் வாய் பிளந்து நிற்பது என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்!!

நாம் ரசிக்கும் ஜாம்பவான்களின் முள்கிரீடத்தை பகிர்ந்துகொள்ளும் பேராசையில் எழுதுகிறேன்!!
எழுத்துலக பிதாமகன்களை நம்மால் எல்லாம் சந்திக்க முடியுமா என்று கேட்டு என்னையும் நலிந்தவர் பட்டியலில் சேர்த்து விட்ட கோபத்தில் எழுதுகிறேன்!!

எத்தனை நாட்கள் தான் பிறர் எச்சில் செய்து போட்ட கோட்டைகளை சப்பிகொண்டு மேடையில் பேச்சாளரென்று வலம் வருவது, என் பெயரில் ஒரு அருகம்புல்லெனும் நட்டு வைக்கவே இந்த இணையவலை முயற்சி...

என் வயதோருக்கு கம்பனும் கலிங்கத்துபரணியும் தெரியாமல் போனது எங்கள் குற்றமல்ல. தமிழை கற்றுகொடுத்து ஊதியம் பெறுவதை கூட ஒப்பு கொள்ளலாம். ஊதியம் பெறுவதற்காக டமிழை கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் வாய்த்ததற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களை பொறுத்த வரை குறுநாவல்கள் என்றால் குங்குமமும் ஆனந்தவிகடனும் தான்! சற்று முழுநீள நாவல்களென்று கொண்டால் கண்மணியயைம் ராணிமுத்துவையும் சொல்லலாம்!!

குற்றாலத்தில் ஐந்தருவி மட்டும் தான் ஸ்பெஷல் என்று பூகோளம் கற்றுகொடுத்த ஆன்றோர்கள் அந்த அருவியில் தோசையை நனைத்து சாப்பிட்ட ரசிகமணியையும் ராஜாஜியையும் அறிமுகப்படுத்தாது எங்கள் விதி! நாங்கள் வெற்றுக்கைகளுடன் அழைவதை டி.கே.சி தாத்தாவும், ல.சா தாத்தாவும் பார்த்து கண்டித்திருந்தால் நாங்களும் ஒரு வேளை கல்யாண்ஜியாகவோ கலாப்ரியாவாகவோ மாறியிருக்ககூடும்!

இன்று ஜெயமோகனையும் நாஞ்சிலையும் படித்துவிட்டு போதையேறி பித்துபிடித்து.. நானும் இந்த இணையவெளியில் மிதக்க ஆரம்பித்திருக்கிறேன். காதலன் அருகிலிருக்க அவன் கரம் பற்ற காந்த அலைகள் ரகசியமாய் ஈர்ப்பதைபோல்.. நானும் எழுத்தை நோக்கி ஈர்க்கப்ட்டவளாகி போனேன்!!

பள்ளி கல்லூரி நாட்களில் நான் தேடிய ஆசிரியர்கள் வாய்க்க பெறவிட்டாலும் சமீபத்தில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தவர்.. நமது நம்பிக்கை மாத இதழின் அசிரியர்..!!
பொதுவாக ஆசிரியர்கள் பாடத்தை சொல்லி கொடுத்துவிட்டுத்தான் தேர்வு வைப்பார்கள். இவர் பல கடினமான தேர்வுகளை வைத்து விட்டுத்தான் ஜெயமோகன் எழுத்துகளை என்னிடம் கொடுத்தார் (ஒரு வேளை உண்மையான ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்களோ??) எது எப்படியோ தேர்வு பெற்ற தைரியத்தில் நானும் பந்தையதில் பங்கேற்க்கிறேன். "PARTICIPATION IS FAR BETTER THAN WATCHING THE RACE"

அவருக்கு எம் பேனா பிசுபிசுத்து ஒழுகும் தமிழ் கூரும் நன்றிகள் பல பல!!!!!