Monday, July 11, 2011

நான் போய் வருகிறேன்.... இல்லை என்னை வழியனுப்பிவிட்டீர்கள் வலுகட்டயாமாய். எனக்கும் உங்களுக்கும் இனி என்ன உறவு. என் நியாபகமாய் உங்களிடம் இருப்பவற்றை ஓப்படைக்க நான் கொடுத்த கெடுவும் முடிந்து விட்டது. உங்கள் நியாபகமாய் என்னிடம் இருப்பதெல்லாம் வெறும் நினைவுகள் மட்டும் தான். உங்களால் மட்டும் என் வட்ட முகத்தையும் அதை சுற்றி சுற்றி வந்த உங்கள் கால்களையும் மறந்து விட முடியுமா என்ன? உங்கள் குடும்பத்தின் மூத்தவர்களை கேட்டு பாருங்கள்...

நான் இல்லாமல் எந்த மங்கலகரமான நிகழ்வுகளும் வீட்டில் நடந்ததே இல்லை.... தங்கைக்கோ, மகளுக்கோ ஏன் தாய்க்கே கூட திருமாங்கல்யத்தோடு சேர்த்து என்னை தான் சீராய் கொடுத்தார்கள். அன்று வருமையில் சூம்பி போனா அம்மாவின் முலைகளுக்கு பதிலாய், எப்படியோ என்னை தான் திரட்டி அழுத குழந்தையின் வாயை இனிப்பால் அடைத்தார்கள். நான் இல்லாமல் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அழுது அடம் பிடித்த போது பெருமையாக இருந்தது.  என்னை மதித்தவர்களும், துதித்தவர்களும் இப்பொது பெரும்பாலும் உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கும் உங்கள் யாரிடமும் உயிர்ப்பு இல்லை.





கணவனுக்கு ஈடாய் என்னை முந்தானையில் முடிகையில் அந்த அழுக்கு வாசத்தில் எத்தனை ஒய்யாரமாய் அமர்ந்திருந்தேன். வியர்வை வாசம் பார்க்காமல் நான் யாரிடமும் தங்குவதேயில்லை.   அன்று பெல் பாட்டம் ஊரையல்லாம் விசிறினாலும்... சட்டையின் நெஞ்சோரமாய் நான் இருந்தால் மீசையின் விரைப்பே தனிதான்.   நான் பார்க்காத கரங்களும் இல்லை. நான் போகாத பயணமும் இல்லை... ஒரு நாளைக்கு நூறு பேரிடம் கூட கை மாறியிருக்கிறேன். என்னை பெற நீங்களும்,  உங்களை தக்கவைக்க நானும்... உழைப்பாலே கைகள் குழுக்கினோம். என் காலத்தில் என்னை எமாற்றியவனும் இல்லை நான் ஏமாந்ததும் இல்லை. என்னால் இயன்ற வரை பசி தீர்த்திருக்கிறேன். தர்மத்தின் தலைவன் நான்! என் கடைசி காலங்களில் தானங்களுக்கும் தர்மங்களுக்கும் மட்டுமே என்னை பயன் படுத்தினீர்கள். மகிழ்ச்சி.

உங்களுக்காக உழைத்தவள் கேட்கிறேன்.
உங்கள் சுயநலத்திற்காக என்னை அழிக்கும் நல்லவர்களே! உங்களை உயர்த்தவே படைக்கபட்ட ஜென்மம் நாங்கள். என் இனக் குழந்தைகள் பாவம்...இனி அவர்களை பார்த்து கொள்ள நான் இருக்க மாட்டேன். உங்களை உயர்த்த எங்கள் சுயத்தை இனியும் குறைத்து கொள்ள முடியாது. உங்கள் துரோகத்திற்க்கும் வஞ்சத்திற்க்கும் எங்களை தானே தலைப்பு செய்திகளாக்கி ஆனந்த படுகிறீர்கள். அன்று எதோ ஒரு மளிகை சரக்கு ரொப்பிய துருப்பிடித்த டப்பியில் இரும்பு துகள்களோடு இருந்த சுகம்...... இன்று உங்கள் குளிரூட்டப்பட்ட அறையிலும். கடவு சொல்லுக்கு அடிமையாய் போன இயந்திரத்திலும். எங்கள் மீது கருப்பு சாயம் பூசி வெளிநாடுகளில் சிறை வைப்பதிலும். சத்தியமாய் இல்லை.

என் வயது ஒத்தவர்களெல்லாம் மகன், மகள், பேரன் பெயர்த்தி என குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். அதுவும் இல்லாதவர்களுக்கு முதியோர் இல்லமாவது உண்டு. என்னை பத்திரபடுத்தவும் ஆழில்லை அப்படியே வைத்திருந்த ஒரு சிலரும் என்னை திரும்ப கொடுத்துவிட்டார்கள்.  இனி உங்கள் பணம் எனும் அகராதியில் இருந்து நீக்கிவிடுங்கள் என் பெயரை. பணவீக்கம் துவங்கிய நாள் முதலே என் செளந்தர்யத்தை நான் இழந்து விட்டேன்.  அழிந்து போன இனங்களின் வரிசையில் இனி என் பெயரும் சேர்க்கப்படும். என்னால் இனி காலணாவிற்க்கும் லாபம் இல்லை. உங்களிடம் நான் பேசியதை மறக்காமல் என் நண்பர்களான உங்கள் தாத்தாக்களிடமும், பாட்டிக்களிடமும் சொல்லி விடுங்கள். எத்தனையோ கோடி விழிகளின் ஈரம் துடைத்தவள் நான். எனக்காக சொற்ப கண்ணீர் துளிகள் கூடவா இல்லாமல் போய் விடும். உங்கள் மூதாதயரின் புகைப்படங்களை அடுத்த தலைமுறைக்காக பத்திர படுத்தும் போது.... மறக்காமல் என்னையும் சேமித்து வையுங்கள்.

உங்கள் சுயசரிதத்தின் முக்கியமான கதை சொல்லி நான். என்னை அழிக்கும் நாள் இன்னும் குறிக்க படவில்லை. அப்படியே குறித்து விட்டாலும் அழிந்து விட மாட்டேன். என்னிலிருந்து என் தலைமுறை பிறந்து கொண்டேதான் இருக்கும். எந்த நிலையயிலும் எங்களுக்கு மரணம் இல்லை. உங்கள் கவிஞன் மட்டுமா தான் கடவுளா என்னா..? நானும் தான்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
25 பைசா நாணயம்

No comments:

Post a Comment